... humans, who were identified as life unworthy of life, including but not limited to the criminal, degenerate, dissident, feeble-minded, homosexual, idle, insane, and the weak, for elimination from the chain of heredity. More than 400,000 people were sterilized against their will, while 275,000 were killed under Action T4, a euthanasia program. 

1) சிம்மச் சந்திரன். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, சென்னை - பாண்டிச்சேரிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். கண்டக்டர் வந்து....தன்னுடைய இருக்கை..நீங்கள் எழுந்திருங்கள் என்று சொல்ல....மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இன்னொருவர் உக்கார்ந்திருக்கிறார், அந்த சீட்டை காலி செய்து எனக்கு கொடுங்கள்....என்று இவர் கேட்க....கண்டக்டர் பதிலுக்கு ஏதோ சொல்ல... இவரும் ஏதோ சொல்ல.... கண்டக்டர் சிம்மச்சந்திரனின் காலிப்பரை ஜன்னல் வழியாக வீசிவிடுகிறார். பஸ்சில் இருந்த சில ஜனங்கள் இறங்கி அதை எடுக்கு முயற்சிக்கும் போது..... யாராவது இறங்கினால்... அவர்களை விட்டுவிட்டு பேருந்து கிளம்பிவிடும்...என்று எச்சரிக்கிறார். சிம்மச்சந்திரனையே இறங்கிபோய் எடுத்துவருமாறு சொல்கிறார். இவரும் சிரமப்பட்டு இறங்கி போய் தன் ஸ்டிக்கை எடுக்கும்போது....கண்டக்டர் பஸ்சை விசிலடித்து கிளப்பிவிடுகிறார்.

2) பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆட்கள் - தங்களது உரிமைகளைப்பெற (இதையே போராட்டம் நடத்தித்தான் வெளியதெரிய வைக்க வேண்டிய நிலமை) போன வருடம் சென்னையில் போராட்டம் நடத்தியதுப் பற்றி பரவலாக செய்திகள் வந்தததை நம்மில் பலர் கவனித்திருக்கலாம். அந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவம் இது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்களை, போலீஸ் அரெஸ்ட் செய்கிறோம் என்று சொல்லி...வேனில் அழைத்து செல்கிறார்கள். அப்பறம், உங்களை அரெஸ்ட் செய்யவில்லை..அங்கிருந்து கிளப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சொல்லி....செங்கல்பட்டு வரை சென்று இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிடிவாதமாக இறங்க மறுத்து....சென்னைக்கு உள்ளேயே இறக்கி விடுங்கள் என்று கேட்கிறார்கள். சரியென்று சொல்லி...கண்ணகி சிலை பக்கத்தில் விட்டுவிடுகிறோம் என்று அழைத்துச் சென்று.....இரவு இரண்டரை மணிபோல ஒரு இடத்தில விட்டுவிடுகிறார்கள். கடற்காத்து அடிக்கவே, இவர்களும் கண்ணகி சிலை தான் போல என்று நினைத்து....விடியும்வரை அங்கயே இருந்துவிடுவது என்ற முடிவோடு...தூங்கி விடுகிறார்கள். காலையில் அந்தப்பக்கம் வந்த ஒருவர் சொல்லித்தான் தெரிகிறது...அது சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏதோவொரு ஊரின், சுடுகாட்டு பாதை என்று.


ஆட்டோகிராப் என்று ஒருபடம் வந்ததே....அந்த சமயத்தில் எல்லாம் இந்தளவிற்காவது தெளிவாக யோசிக்கத் தெரியாத உயிரினமாகத்தான் இருந்தேன். ஆனால் "ஒவ்வொரு பூக்களுமே' பாட்டை முதல்தடவை பார்க்கும்போதே ஒருவித எரிச்சலே ஏற்பட்டது (சேரன் நல்லது செய்வதாகக் நினைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு முறை அந்தப்பாடலைப் பார்க்கும் பொழுதும் ஒரு மெல்லிய எரிச்சலே ஏற்பட்டது/படுகிறது. நான் என்ன செய்வது). ஒரு ஷாட்டில், பார்வைகுறைபாடுள்ள ஆள் ஒருவர் வருவார். தேவையேயில்லாமல் அவர் கண்களுக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து...அழவிட்டு. என்ன சொல்ல வருகிறார்கள் ? மற்றவர்கள்/உயிரினங்கள் மீது அன்பு தானே வரவேண்டும்....ஏன் பச்சாதாபம் வர வேண்டும் ? இரண்டுக்கும் ஏக வித்தியாசம் உண்டல்லவா. நம்மைப் பார்த்து இன்னொருவர் பச்சாதாபப்படுகிறார் என்றால்...அங்கு முதலில் அடிபடுவது நம் சுயமரியாதை தான். நமக்கு எப்பொழுதும் பரிதாபப்பட (அதோடு, நமது உபதேசங்களை கொட்டவும்,  நான் இதெல்லாம் படிக்கிறேன்/பார்க்கிறேன்/கேட்கிறேன்/போட்டோ எடுக்கிறேன் - நமது அலைவரிசைக்கு மாற்றாக இருக்கும் ஆட்களை ஜாடைமாடையாக மட்டப்படுத்தவும்) எப்பொழுதும் ஒரு ஜந்து தேவைபட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படியான பரிதாப உணர்ச்சி....ஒரு எழவுக்கும் பயன்படாது என்பதுதான் நிஜம்.

அந்த ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியின் பார்ட் - 1 பாருங்கள். அந்தப் பெண்மணி ப்ளாட்ஃபாரத்தில் ஒருகாலை வைத்து....சின்ன தயக்கத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட குதித்து தான் கடந்து போகிறார். பார்க்கும்போதே சுருக்கென்று என்னமோ செய்கிறது. தினமும் அவர் இவ்வாறுதான் சென்றாக வேண்டும். கோட்டூர்புறத்திற்கு போக வீல்சேர் உள்ளே போகும் பஸ் என்று ஒன்றே ஒன்று தான் உள்ளது போல். இவரும் இன்னொரு பெண்மணியும் பத்து மணியில் இருந்து காத்திருக்கிறார்கள். பஸ் வந்தபாடில்லை. டைம் கீப்பரிடம் கேட்டால், அடுத்த வண்டி பனிரெண்டு மணிக்கு தான்; இதுதவிர வேறு வண்டியில்லை; ஒருவேளை உங்களுக்கு அந்தமாறி வீல் சேர் போகும் பஸ், வேறு பாய்ண்ட்ல் ஓடுவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று இவர்களிடமே கேட்கிறார். இதில் எத்தனை சிக்கல்கள்...எத்தனை மன உளைச்சல்கள் - ஒழுங்கான ப்ளாட்ஃபாரம் இல்லை, பஸ் இல்லை, உள்ள பஸ்களும் இவர்கள் ஏற வசதியாய் இல்லை, வேலைக்கு போயாக வேண்டும், ஆட்டோ மாதிரி வண்டிகளில் போனால் நிச்சயம் காசு அதிகமாகும். இதுவொரு செயின் ரியாக்ஷன் மாதிரி அவர்களது குடும்பம்வரை பாதித்துக்கொண்டே இருக்கும். வீட்டை விட்டு, வேலைக்கு - அன்றாடம் சராசரியான ஆட்கள் செய்யும் வேலை இது - போகும் அடிப்படை விஷயத்திற்கே இவர்கள் இவ்ளோ பாடுபட வேண்டியுள்ளது. இதில் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவது எத்தகையை ஒரு வன்முறையான செயலாக இருக்க முடியும் ? இதுபோன்ற ஒரு சம்பவத்தை ஏதேச்சையாக அன்றைக்கு பார்த்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்......நான் தான் இளகிய மனம்கொண்டவன் ஆயிற்றே......சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் படும்பாட்டை பார்த்தாலே லிட்டர் லிட்டராக கண்ணீர்விடும் புண்ணியாத்மா நான்.. இப்பொழுது கேட்கவும் வேண்டுமா...பொழக்கென்று அழுதுவிடுகிறேன். அவ்ளோதான். நமக்கும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொண்டு..என் பஸ் வந்ததும் ஓடிசென்று ஏறி...அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். இந்த அதீத உணர்ச்சிவசப்படுதலை விட்டுவிட்டு, ஒரு சக மனிதன் மற்றொரு சக மனிதனுக்கு என்ன செய்திருக்க முடியும் ? சரி, எனக்கு உடல்ரீதியாக சில வேலைகளை செய்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்களுக்கு அதில் பிரச்சனை உள்ளது...என்ன செய்யலாம் ? அவர்களை நான் மற்றொரு பஸ்சில் ஏற்றி விடலாமா.....முதலில் அவர்கள் நிச்சயமாக அதனை விரும்ப மாட்டார்கள் (ஏனென்று தெரிந்தவர்கள் இந்தப்பதிவை படிக்க வேண்டியதே இல்லை). அடுத்து, யார் அவர்களை இறக்கி விடுவது ?

மாறாக, போக்குவரத்து கழகத்திடம் சென்று இதுபற்றி ஏதாவது கேட்கவாவது செய்யலாம். பத்துபேர் கேட்டல், ஒரு சின்ன அசைவாவது இல்லாமலா போய்விடும் (ஆனால் நிஜத்தில் நூறுபேர் போய் கேட்டும்/போராடியும் இந்த விஷயம் பெருமளவு அப்படியே தான் உள்ளது). இந்தியாவின் ஒருசில மெட்ரோகளிலாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உண்டு (அது நிச்சயம் போதாது என்பது வேறுகதை). ஆனால், மற்ற எல்லா இடங்களிலும் மாற்றுதிறனாளிகள் யார் உதவியுமின்றி தங்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு குறைந்தபட்ச வசதிகளாவது இருக்கிறதா என்று பார்த்தால்.....ஒரு _______ம் இல்லை. பேங்க், ஸ்கூல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் இதே நிலைமை தான். ஒன்று, அவர்கள் மற்றவர்களது தயவை எதிர்பார்க்க வேண்டும். இல்லையென்றால், படுசிரமப்பட்டு உள்ளே சென்று..மிகுந்த ஆயாசத்துடன் அந்த வேலையை முடிக்க வேண்டும். இதிலேயே அவர்களுக்கு ஏகப்பட்ட நேர விரயமும், உடல் உழைப்பும் போய்விடும்.  இன்னமும் என்னால் மறக்க முடியாத விஷயம்...நான் படித்த பல்கலைகழகத்தில், பாத்ரூமில்.....மற்றொரு பிரிவைச் சேர்ந்த, போலியோ பாதிப்பிற்குள்ளான மாணவன் ஒருவன்.....உள்ளே தரையில் அந்த ஈரத்துடன் தவழ்ந்து தவழ்ந்து வந்து....சின்ன ப்ளாட்ஃபார்மில் ஏறி...பீங்கான் கோப்பை அருகே உக்கார்ந்து தான் யூரின் போயாக வேண்டும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும்பொழதே...பயங்கரமான நினைவுகளை இது கிளப்பிவிட்டுவிட்டது. என் வயசு தான் அவனுக்கும். மனிதனின் மிகஅடிப்படை தேவை - சிறுநீர் கழிப்பது. அந்த அடிப்படை தேவையை, காலில் உள்ள பிரச்சனையால், ஏகப்பட்ட சிரமத்தைக கடந்து தினமும் படிக்க வரும் ஒருவனுக்கு - சுலபமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு தானே நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்......ஆனால் இங்கு ஏன் எல்லாம் தலைகீழாக இருக்கிறது ? அதேபோல....பஸ் பிரயாணத்தின் போது - நமது அம்மாவோ/தங்கையோ/தோழியோ/சுற்றி இருக்கும் பெண்கள்....எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோமா ?


ஒருவீட்டில் உள்ள கழிப்பறையை /யார் அதை சுத்தம் செய்கிறார்கள் என்பதை வைத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் பற்றி சர்வ நிச்சயமாக சொல்லிவிட முடியும். அதேபோல, ஒரு நாடு பெரிய வல்லரசு நல்லரசு என்றால் அதன் அடிப்படை கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து சொல்லிவிடலாம். சத்தியமாக இது என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. அணுவுலை வேண்டும் என்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அனைத்தும் அதைத்தான் உபயோகிக்கிறது என்று சொல்கிறார்கள். சரி. போகட்டும். சந்தோஷம். ஆனால் வளந்த நாடுகளில்/ வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இப்படி மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் ஒண்ணுக்கு அடிக்க கூட இடம் தேடி ஓட வேண்டிய நிலைமையில்லையே ? அங்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பூர்த்திசெய்துவிட்டு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். நம் நாட்டில் செய்யப்பட வேண்டிய அடிப்படை விஷயங்களே ஏகத்துக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு.....

ஊமை, நொண்டி, அலி, மெண்டல்......இவர்களுக்கு எல்லாம் இந்தியா முழுவதும் ஒரே பெயர் தான். தனியாக தமிழ் ஊமை, கன்னட நொண்டி, மராத்திய அலி, பைத்தியம் என்று யாரும் மொழி/இனம்/ஜாதி/மாநிலத்தை வைத்தெல்லாம் இதில் பிரித்துபேசுவதில்லை. என்னவொரு ஒருமைப்பாடு.சகோதரதத்துவம். இதில் தமிழன், திராவிடம், ஹிந்தி , லொட்டு லொசுக்கு என்ற பேச்சு வேற. எரிச்சல் மண்டிக்கொண்டு தான் வருகிறது. உலகின் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை - நம் நாட்டுக் குழந்தை. இப்படிபிறப்பு முதல், வளரும் பொழுது பாலியல் கொடுமைகளில் ஆரம்பித்து...ஏகப்பட்ட பிரச்சனைகள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இதில் சத்துக்குறைபாடு வேறு இருந்தால்..... recoverable என்ற நிலையில் இருந்து ஒரேடியாக பலஆட்கள் irrecoverable நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

(நம்நாட்டில் அவர்கள் வாழ்கையை மிகுந்த சிரமத்திற்கு இடையே  தள்ளித்தான் ஆக வேண்டும். எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு அரசியல் கட்சியும், இதுவரை மாற்றுத்திறனாளிகள் குறித்த தெளிவான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் படுமோசம். தமிழ், திராவிடம், தனிக்கட்சி என்று பேசிப்பேசியே கண்ணெதிரே உள்ள பல முக்கிய விஷயங்களை கவனிப்பாதோ...பேசுவதோ இல்லை...ஓ..சாரி..நமக்குதான் எல்லாம் நன்றாகத்தானே உள்ளது (ஆண் என்றால் இன்னும் வசதி). நமக்கெதுக்கு இதுபற்றிய பேச்செல்லாம்....என் கவனம் எல்லாம் என் பெயரை கணேஷ் என்று எழுதுவதா...கணேசு என்று எழுதி என் தமிழ் ஆர்வத்தை நிரூபிப்பதா என்பதில் தான் இருக்கிறது. இதுவரை தமிழுக்காக ஒரு மயிரையும் கிழித்தது இல்லை. குறைந்தபட்சம் விக்கியில் என் துறை சார்ந்த கட்டுரை எழுதியிருப்பேனா என்றால்...அதுவும் இல்லை. ஆனால் பேச்சு மட்டும் வாய்கிழியும். செய்வதற்கும்/மாற்றப்பட வேண்டியதுற்கும் ஓராயிரம் விஷயங்கள் நம்முன்னாடி தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது)


இந்த பவர்பாய்ண்ட் - இந்திய சென்சஸ் டிபார்ட்மெண்டே தயாரித்தது. இதில் பல முக்கிய புள்ளிவிவரங்கள் உள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.

இன்னொரு பகீர் விஷயமும் உண்டு. இன்ஷுரன்ஸ். நானும் முடிந்தமட்டும் பல இன்ஷுரன்ஸ் கம்பனிகளின் தளத்திற்குச் சென்று பார்த்துவிட்டேன். ஒருசில இன்ஷுரன்ஸ் தவிர, பலதளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் இன்ஷுரன்ஸ் திட்டங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சரி, LIC - Indian Postal Insurance போன்றவைகளாவது மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி திட்டங்களைப் பற்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறதே என்று சந்தோசப்படும்பொழுது...பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியை சேர்ந்த - பார்வை குறைபாடுள்ள ஒரு வக்கீல், indian postal insuranceல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அவருடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - 5 லட்சம். ஆனால் அவருக்கோ....1 லட்சம் மட்டுமே. மற்றொரு கொடுமை....மாற்றுத்திறனாளிகள் அதிக ப்ரீமியம் தொகை செலுத்தியாக வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை......மருத்துவ செலவு, உபகரணங்கள், குடும்ப செலவு என்று ஏகப்பட்ட விஷயங்களோட சேர்த்து அவர்கள் ப்ரீமியம் தொகையை அதிகளவில் செலுத்தியாக வேண்டும். என்ன எழவு லாஜிக் இது என்று யாராவது விளக்கவும். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தாலும்..தற்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்ஷுரன்ஸ் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதை கொஞ்சம் விளக்கினால் நலம்
நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக - அமர்த்தியா சென், 2004ஆம் ஆண்டு உலக வங்கியின் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய....இக்கட்டுரையைச் சொல்லலாம்.
பொளேரென்று முகத்தில் அறை வாங்கியதைப் போன்ற உணர்வு பலஇடங்களில் நிச்சயம் எழுந்தே தீரும். முக்கியமாக இந்த வாக்கியங்கள் "Given what can be achieved through intelligent and humane intervention, it is amazing how inactive and smug most societies are about the prevalence of the unshared burden of disability". இதில் unshared burden....என்னைப் பொறுத்தவரை இந்த burdenனை எப்பொழுதுமே நாம் பலரும் தட்டிக்கழிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறோமேயன்றி....சுமையை பகிர்ந்துகொள்ள முயற்சிப்பதேயில்லை. உடல் உழைப்பு - பொருளாதாரம் - கல்வி என்று பலவிதங்களிலும் இதனை நாம் செய்ய முடியும். ஒரு வேலையைச் செய்தால்......பதிலுக்கு அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும்.....இப்படியாக மட்டுமே எனது யோசனைகள் எல்லாம் குறுகிக்கொண்டே வருவது எனக்கே நன்றாக தெரிகிறது (இதனை படிப்பவர்கள் சார்பிலெல்லாம் என்னால் கருத்து சொல்ல முடியாதுதானே... அதனால் நீங்களே இதனைப்பற்றி யோசித்துக்கொள்ளுங்கள்). இவருக்கு இந்த வேலையை செய்து கொடுப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்....இந்த பதிவை எழுதுவதால் எனக்கு என்ன கிடைக்கும்....யாருக்காவது பொருளாதாரரீதியிலான வேலை செய்தால் அதிலிருந்து என்ன கிடைக்கும்......ஒருவிதமான முதலீட்டு மனநிலைக்கு நான் பழகப்பட்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது.

இதில் மூன்று முக்கிய விஷயங்களை அமர்த்தியா சென் முன்வைக்கிறார்

1) Utilitarianism (தமிழில் என்ன ?) - தனிபட்ட மனிதர்களின் மகிழ்ச்சி/திருப்தி/சந்தோஷம் - இவைகளின் அடிப்படையில், ஒருவருக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை மதிப்பிடுவது

2) ஒருவரது பொருளாதார நிலைமையை வைத்து மதிப்பீடு செய்வது

3) மூன்றாவது - Rawlsian Theory of justice. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம், அவனுக்கான வெளி, உரிமைகள் அவனுக்கு அவனுக்கு விருப்பமான விஷயங்களின் மீது இருக்கும் தேர்வு...அடிப்படையான நல்லெண்ணங்கள் மூலம்....சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
Rawls's theory of justice revolves around the adaptation of two fundamental principles of justice which would, in turn, guarantee a just and morally acceptable society. The first principle guarantees the right of each person to have the most extensive basic liberty compatible with the liberty of others. The second principle states that social and economic positions are to be (a) to everyone's advantage and (b) open to all  - Source: Link

இந்த விஷயத்தை என்னால் எளிமையாக விளக்கமுடியவில்லை. தெரியவில்லை. ஓரளவுக்கு இதனை நான் புரிந்துகொள்ள இந்த வீடியோவும், இதுவும் உதவியது

(இதையெல்லாம் கணியன் பூங்குன்றனார் அப்போதே சொல்லிவிட்டார். பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இப்போது சொல்லப்படும் பல கோட்பாடுகளின் பீட்டா வெர்ஷனாக இதனைச் சொல்லலாம்)

மாற்றுத் திறனாளிகள் என்று வரும்பொழுது இந்த மூன்று விஷயங்களும் அடியோடு அடிபட்டு போய்விடுகிறது. ஒன்றும் வேண்டாம்.....திண்டுக்கல் மாதிரி ஒரு ஊரில் மாற்றுத்திறனாளி ஒருவர் சினிமா பார்க்க பிரியப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அதிலொரு பொழுதுபோக்கு...சந்தோஷம். கொஞ்சம் பணவசதிபடைத்தவராக இருந்தால், கார் - பிரத்தியேக சேர் என்று கொஞ்சமாவது சமாளிக்கலாம் (சரி, அப்படியே அவர் உள்ளே சென்றாலும்.....எப்படியான கழிவறை வசதி இருக்கும் ?). கொஞ்சம் பின்தங்கிய நிலையில் உள்ள ஆள் என்றால் சொல்லவே வேண்டாம். கைவண்டி போன்றவற்றை தான் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள். அவர்களால் எப்படி உள்ளே செல்ல முடியும் ? மிகச்சாதாரண ஒரு பொழுதுபோக்கு அம்சம்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.  இதுபோன்ற எந்த பிரச்சனையும் சந்திக்காத நாம்...படத்தின் இன்டர்வெல்லில் காண்பிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் ட்ரைலர் தரம் குறித்து காரசாரமாக விவாதித்திக் கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசத்தின் தாக்கம் குறித்து ஓரளவு நாம் யோசித்தாலே கொஞ்சமேனும் மாற்றம் ஏற்படும் என்று நம்பலாம். மற்றொரு மிகமுக்கியமான விஷயத்தையும் அமர்த்தியா சென் தனது பேச்சில் குறிப்பிடுகிறார். "Earning handicap & Conversion handicap". மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கிடைபப்தும்/ஒரு நிலையான வருமானம் வருவதிலும் உள்ள சிரமம் & வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், அந்த வருமானத்தை எவ்வாறு/எதற்காக செலவிடுகிறார்கள் என்பதும் தான் அது. இன்ஷுரன்ஸ் -  ஒரு நல்ல உதாரணம். தவிர, மாற்றுத்திறனாளிகளும்  அவர்களைச் சார்ந்தவர்களும் ஒரு வேலையை செய்ய - அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் - செலவிடப்படவேண்டிய நேரம் மிகதிகமாகவே உள்ளது. சொந்தமாக/பிற வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளை இந்த நேர விரயம் பெரிதும் பாதிக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதுயில்லை.





Jacques Audiard, மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உரிய மரியாதையோடும் உரிமைகளோடும் நடத்தும் ஃப்ரான்சில் Rust & Bone மாதிரியான படத்தை எடுப்பதற்கும், நம்நாட்டில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி/அவர்களை வைத்து எடுக்கப்படும் படத்திற்கும்/படைப்பிற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டுதானே. இங்கு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என்று பலரையும் கேவலமாகத்தான் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவே பயங்கர கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை எந்த சினிமாவும்/படைப்பும் நேர்மையாக, இந்தியாவில் பதிவு செய்துள்ளதாக எனக்குத்தெரியவில்லை. வரும் ஒன்றிரண்டு படைப்புகளும் "கவித்துவமான, யதார்த்த" வாழ்கையை பிரதிபலிப்பதாக நீங்கள் நம்ப, உங்களுக்கு பூரண உரிமை உண்டு. அதில் யாரும் தலையிடவே முடியாது. ஆனால் நிதர்சனம் அதுவல்ல ஐயா. மிகக்கொடுமையானது. மாற்றுத்திறனாலிகள் பலரும் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சகிப்புத்தன்மையை "யதார்த்தம்" என்று நம்பினால்....ஒன்றும் செய்ய முடியாது. நானும் இதுவரை ஒன்றுமே கிழித்துவிடவில்லை தான். அந்த கையாலாகாததனம்தான்...இப்படி போலிபாவனைகளுடன் கூடிய பதிவாக வந்திருக்கிறது. பொருளாதாரரீதியில் நான் ஏதாவது செய்வது கூட....நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றஉணர்வின் காரணமாகவே இருக்கும். Escapist mentality. தனிமனிதனுக்கும் - சமூகத்துக்கும் உள்ள இந்த கட்டமைப்பு பற்றி அடிக்கடி யோசிப்பது உண்டு. எப்பொழுதுமே ஒருவித எரிச்சலான மனநிலைக்கு அது கூட்டிச்சென்று விடுகிறது. சூது, காமம் - இது இரண்டிற்கும் தான் அதிகமாக பயப்படுவேன் என்று பாரதி சொன்னமாதிரி...."இந்த சமூகம் இருக்கே...."என்று ஆரம்பிப்பவர்களைக் கண்டு எனக்கு படுபயங்கர பயம் உண்டு. அப்படியே ஓடிவிடுவேன். சமூகம் என்ன MiBல் வரும் வேற்றுகிரகவாசியா.....எங்கிருந்தோ வந்து இங்கே இறங்கி....தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க. நான்/நீங்கள்/அவன்/அவள்/அது - இதானே சமூகம். Collective conscience தானே அது. நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு அதிர்வும் எங்காவது முடிந்துதானேயாக வேண்டும் ?

போன வருடம் சுப்ரீம் கோர்ட், அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இதுவே 1995ல் வந்த சட்டத்தின் விளைவாக 18 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு - இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை - வந்துள்ளது.
போன மாதம் Rights of persons with disabilities bill 2014 ஒன்று நடைமுறைக்கு வந்தது. இதுபற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இதன் சாதகபாதகங்கள் குறித்து இன்னும் நான் படிக்க வேண்டியுள்ளது
  1. Disabilities Bill tabled in Rajya Sabha
  2. Why are disability rights activists divided over the Disability Bill?

மேலும் சில முக்கிய லிங்க்கள்:

பிகு:
புதிய தலைமுறையில், ஒவ்வொரு ஞாயிறும் வரும் ரௌத்திரம் பழகு மிகநல்ல/அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்று. அதனை முன்னின்று நடத்துபவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும். ஒரேயொரு வேண்டுகோள். வாய்ஸ் ஓவரை அவர்கள் குறைத்தால்....நிகழ்ச்சி எங்கோ சென்றுவிடும். வாத்து மேய்க்கும் ஒருவரைப் பற்றி - போனவாரம் என்று ஞாபகம் - நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். நள்ளிரவு. அவர் தீவட்டியை பற்ற வைக்கிறார். இது எல்லாமே மிகத்தெளிவாக விஷ்வலாக தெரிகிறது. அதை ஏன் வாய்ஸ் ஓவரில் வேறு சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே ஒருவித சஞ்சலமாகவே இருந்தது. சரியாக, இந்த ரெண்டு வாரத்தில் இணையத்தில்/Facebookல் போட்டப்பட்ட சில பதிவுகளும் காமென்ட்களும்.....சற்று எரிச்சலை ஏற்படுத்திவிட்டது (நானெல்லாம் எரிச்சல்படுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை தான்).




While in the hospital, i was thinking....maybe i should live a more thoughtful life...now that they have repaired me. Then my eyes caught the ass of the nurse, who just made my bed and my dick stood up instantly. Not a chance.

- Takeshi Kitano,  படுபயங்கரமான விபத்திற்குப் பிறகு


தகெஷி கிடானோ: மேடை நகைச்சுவையாளர்/நடிகர்/இயக்குனர்/படத்தொகுப்பாளர்/பாடகர்/தயாரிப்பாளர்/ஓவியர்/ எழுத்தாளர்/கவிஞர் என்று அவருக்கு டஜன் முகங்கள் உண்டு. கவனிக்க வேண்டிய விஷயம், எந்தத்துறையையும் அவர் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கவில்லை. It just happened என்பார்களே.....அப்படித்தான் நடந்தது. பட்டென்று அவரைப்பற்றி புரியவைக்க, அவரின் இந்த வேலையே போதும்


ஹிரோஷிமா - நாகசாகி- இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம், ஜப்பான் முழுமைக்குமே சோதனையான காலங்கள். அந்தப் பின்னாற்பதுகளில் குடிகார சூதாடி அப்பா(

பெயர், கிகுஜிரோ); ஏகப்பட்ட உடன்பிறப்புகள்; தனது சக்திக்கு மீறி உழைப்பை கொட்டிக்கொண்டிருந்த தாயார் என்று நெருக்கடியான சூழ்நிலையில் தான் கிடானோ வளர்ந்தார். கிடானோவின் அம்மா குழந்தைகளின் படிப்பில் மிகக்கண்டிப்பானவர். கடுமையான உழைப்பின் காரணமாக அனைத்து குழந்தைகளுக்கும் அதனை சாத்தியமாக்கினார். கடும்வறுமை நிலை குழந்தைகளது படிப்பை எவ்விதத்திலும் பாதிக்க அவர் விடவில்லை. ஆனாலும் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத கிடானோ தவளைகளின் டிக்கியில் பட்டாசுகளை கொளுத்திவிட்டு விளையாண்டு கொண்டிருந்தார். பயங்கர குசும்பனாகவே அவர் வளர்ந்தார். அவரது எல்லா படங்களிலும் இந்த குசும்புத்தனத்தை யாரும் எதிர்பாக்காத நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதேயில்லை. ஒருபக்கம் ஜாலியாக வாழ்கையை கழித்துக்கொண்டிருந்தாலும், முக்கித்தக்கி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு என்ஜினியரிங் படிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறார்.

இங்குதான் அவரது வாழ்க்கைமுறை அடியோடு மாறத் தொடங்கியது. 18 வயதில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் விட்டேத்தித்தனமான, Rebel without a cause மனநிலை. ஜப்பானிய மொழியில் இதற்கு “Futen” என்று பெயர். ஹிப்பித்தனமான வாழ்க்கைமுறை. மணிக்கணக்காக ஜாஸ் இசையை கேட்டுக் கொண்டும், Sartreல் ஆரம்பித்து Camus வரை 60களில் மேற்குலக சித்தாந்தங்களை அசைத்த அனைவரையும் அங்குதான் கண்டுகொண்டார். இந்த காலகட்டத்தில் அவரை பாதித்த இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை என்று அனைத்து விஷயங்களும் வெவ்வேறு வடிவில் பின்னாட்களில் அவரது படைப்புகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இந்த விட்டேத்தி மனநிலை உச்சத்திற்கு போய், தனக்கான வாழ்க்கையை வாழாமலேயே செத்து விடுவோமோ என்ற ஞானோதயத்தின் காரணமாக படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். இன்னதென்று இல்லாமல், கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்துகொண்டு நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தாலும் வருங்காலம் பற்றி ஒரு முக்கிய முடிவெடுக்கத் தவறவில்லை. அது - காமெடியனாக ஆவது. இந்த முடிவை அவரெடுக்க பல தீர்க்கமான காரணங்கள் உண்டு. சிறுவயதில் அவர் எதைச் செய்தாலும், அம்மா - குடும்பம் - ஆசிரியர் என்று அனைவரும் சொல்லிவைத்தது போல, இதை செய்யாதே - அதை செய்யாதே - இதெல்லாம் பாவம் - பேசக்கூடாத விஷயம் என்று பயங்கரமாக அவரை கட்டுப்படுத்தவே செய்தனர். ஆனாலும் காமெடியனுக்கு இந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாதே. கிடானோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "As a comedian says and does what he thinks is funny, by expressing himself, the choice of becoming one was another act of defiance. Thus to defy became self-realization and the means to become independent and live my own life".

இங்கிருந்துதான் அவரது ஒரு ஈகோ – Beat, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கிறது. கொஞ்சகொஞ்சமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஆரம்பித்து, ஒரு சுபயோக தினத்தில் இன்னொரு நடிகரும் இவரும் சேர்ந்து The Two Beats என்ற பெயரில் ஸ்டான்ட்–அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆரம்பத்தில் “நல்ல” பிள்ளையாக நிகழ்ச்சியில் வலம்வந்த தகெஷி, போகப்போக உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த பல ஆற்றாமைகளை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார். சமூகத்தின் பல புனித பிம்பங்களை போகிறபோக்கில் உடைக்க ஆரம்பித்தார். எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தனது தாயார் முதல் ஆசிரியர்கள் வரை தடுத்தார்களோ, அதெல்லாம் அந்நிகழ்ச்சியின் வாயிலாக செய்ய ஆரம்பித்தார். நம்மைத் தான் இத்தனை நக்கல் செய்கிறார் என்று மக்களுக்கு பிடிபடவே பலமாதங்கள் ஆயிற்று. பயங்கர பகடியுடனே அனைத்து விஷயங்களையும் சொன்னதன் விளைவு - நிகழ்ச்சி அமோக வெற்றி. ஜப்பான் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் அந்நிகழ்ச்சி கொண்டுபோய் சேர்த்தது.

எண்பதுகளின் காலகட்டத்தில் தான் அவரது மற்றொரு ஈகோ – தகெஷி வேறுமாதிரி வெளிப்படத் துவங்கினான். புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஒஷிமா நாகிஷாவின் Merry Christmas Mr Lawrence என்ற மிகமுக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தத. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே, சைக்கோவாகக் கூட தொலைக்காட்சியில் சீரியஸ் வேடங்களிலும் நடித்தார். ஆனால்.......ஜப்பானிய மக்கள் அவரை அவர் நினைத்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. பழைய பீட் கிடானோவாகவே பார்த்தனர். மிகுந்த எரிச்சலுடன் இதனை ஒரு நேர்முகத்தில் அவர் பதிவு செய்துள்ளார். “நான் மேடை நிகழ்ச்சி நடத்தும் பொழுது.....பார்த்தவர்கள் சிரித்தனர். என் நோக்கமும் அதுதான். ஆனால், மிகுந்த சீரியஸாக நான் படத்தில் நடித்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். படுபயங்கர அதிர்ச்சியாக இருந்தது”. ஓஹோ.....என்னை இப்படித்தான் பார்க்கிறீர்களோ.....ஒருநாள் இதற்கு வேறுமாதிரி பதில் சொல்லிக்கொள்கிறேன் என்று அவர் முடிவெடுத்தது அப்பொழுதான். தன்னைத்தானே கட்டுடைத்துக் கொண்டு வேறுமாதிரியான ஆளாக வெளிப்பட வேண்டும் என்று முனைப்பு தோன்றியதும் அப்பொழுதிருந்துதான்.

1989. Violent Cop என்றொரு படம் ஆரம்பிக்கப்படுகிறது. முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் லீட் ரோல் செய்யும் வாய்ப்பு. ஆனால் இயக்குனர் படமாக்கும் முறையுடன் கிடானோவால் ஒன்ற முடியவில்லை. பல Takeகளாக இயக்குனர் எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடானோவைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது spontaneous reactioனாக இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. கிடானோ இவ்வாறு பேசிக்கொண்டு திரிவதை கேள்விப்பட்ட இயக்குனர், கிடானோ படத்தில் நடிப்பதாய் இருந்தால் நான் வெளியேறிவிடுவேன் என்று மிரட்ட...தயாரிப்பாளர் இதனை கிடானோவிடம் சொல்ல.....படத்தை நானே இயக்குகிறேனே என்று டக்கென்று களத்தில் குதிக்கிறார். படங்களின் தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாது. சொல்லப் போனால் அதிகளவில் படங்கள் கூட அவர் பார்த்ததில்லை. தான் படித்த, தன்னை பாதித்த அனைத்து விஷயங்களையும் (Futen வாழ்க்கைமுறை....நினைவுக்கு வருகிறதா ?) படத்தின் உள்ளே கொண்டுவருகிறார். ஆக்சன் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், உணர்வுப்பூர்வமான காட்சிகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் போன்ற எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், தான் நினைத்ததை செய்யத் தொடங்குகிறார். விளைவு......உலகிற்கு கிடானோ என்ற Auteurரின் வரவு. அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களில் இருந்தும் இன்றும்கூட Violent Cop தனித்துத்தெரிவதைக் காணலாம்.
ஜப்பானிய கலாச்சாரத்தில் – மௌனத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்வதில் ஆரம்பித்து.....மரியாதை வரை பல அடுக்குகளில் மௌனம் அங்கு ஒரு அனுபவமாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒருவர் பேசும்பொழுது மற்றொருவர் படக்கென்று குறுக்கிடுவதையும், மற்றொருவர் அமைதியாக இருக்கும் தருணத்தை தேவையில்லாமல் கெடுப்பதையும் மிகப்பெரிய அவமதிப்பாகவே அங்கே கருதுவார்கள். ஏன் பல ஜப்பானிய மாஸ்டர்களின் படங்களில் பல இடங்களில் மௌனமாக கேமரா அசைவற்று நிற்கும் என்பதற்கான விடையும் இதுதான். 

அப்படியான மாஸ்டர்களுக்கெல்லாம் மாஸ்டர் தான் – யஜிரோ ஓசு. குரோசாவாவிற்கும் ஒசுவிற்கும் உள்ள வித்தியாசம், சத்யஜித் ரேவிற்கும் ரித்விக் கட்டகிற்கும் உள்ள வித்தியாசம். குரோசாவாவிடம் சற்று ஹாலிவுட் தன்மை இருக்கும். ஒசுவிடம் முழுக்க முழுக்க ஜப்பானிய தன்மை மட்டுமே நிரம்பியிருக்கும். பார்வையாளர்களை தனது மௌனமொழியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடுவார். அப்போது தொடங்கி....கிடானோ வரை இந்த மௌனம் ஜப்பானிய படங்களில் முக்கிய அம்சமாகும். 

1991ல் A Scene at the sea படம் வெளிவருகிறது. குழந்தைத்தனம் கலந்த அவரது ஆர்டிஸ்டிக் முகம் வெளிப்படத்தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். அதேபோல, கிடானோவின் ஏறக்குறைய அனைத்து படங்களிலும் கடல் நிச்சயம் பங்குபெற ஆரம்பித்ததும் இந்தப்படத்தில் இருந்துதான். அதற்கடுத்து வந்த படம் தான் Sonatine. உலகம் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் சேர்த்த படம். குறிப்பாக அமெரிக்காவிற்கு. அமெரிக்காவில் வீடியோ கடை ஒன்றில் எண்பதுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவனை தகெஷியின் திரைமொழி பயங்கரமாக பாதிக்கிறது. பின்னாட்களில் அந்த இளைஞன் எடுத்த பல படங்களிலும் தகெஷியின் பாதிப்பை முழுமையாக உணரலாம். அதே இளைஞன் தான், Sonatine திரைப்படத்தை அமெரிக்காவில் கொண்டுபோய் சேர்த்தது (அந்தாளின் பெயர் ?) Sonatine - கிடானோவின் ட்ரேட்மார்க் ரகளைகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற படம் அது. யகுசா குழுவை கிடானோ தனது படங்களில் காட்ட ஆரம்பித்ததும் அதிலிருந்துதான். எல்லாவற்றையும் தாண்டி Sonatine படத்தில் மிகமுக்கியமானதொரு விஷயம் இருந்தது. கிடானோவின் பல படங்களில் இசையமைப்பாளரான ஜோ ஹிஷாஷியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “his most bleak film”. படம் பார்த்தவர்களுக்கு இதற்கான காரணம் புரியும். மிகுந்த மனஉளைச்சலுடன் கிடானோ திரிந்துகொண்டிருந்த காலம் அது. கொதிகலன் போல் எந்நேரமும் யார் மீதாவது எரிந்துவிழுந்து கொண்டிருந்தார்.

1994. ஒரு படுபயங்கரமான விபத்து. எப்படி நடந்தது என்று இன்றுவரை அவருக்கே சரியாகத் தெரியவில்லை. உடலின் ஒருபக்கம் முழுமைக்கும் செயலிழந்துவிட்டது. மிகநீண்ட போரட்டத்திற்கு பிறகே முகத்தில் கொஞ்சமாவது அசைவுகளை அவரால் கொண்டுவர முடிந்தது. இதன் காரணமாகவே அவரது முகம் இப்பொழுதும் சலனமற்று, பாவனையற்று இருக்கும். இந்த விபத்து அவரது வாழ்கையை, அடியோடு மாற்றியது என்று ரெடிமேடாக சொல்வோமே.....அப்படியல்லாமல் நிஜமாகவே தலைகீழாக மாற்றியது. இந்த விபத்திற்குப் பிறகு மிகநேர்மையான இன்டர்வியுவை அவர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தார். முகத்தின் ஒரு பக்கம் எவ்வித அசைவும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையில், ஒரு கட்டத்தில் உடைந்து அழுது......தான் செய்த பல தவறுகளை ஒப்புக்கொண்டார். அந்த காலகட்டத்தில் தான், சிகிச்சையின் போது வீட்டில் இருக்கும் சமயங்களில் ஓவியம் வரைய ஆரம்பித்தது. இந்த விபத்திற்கு பிறகு வந்த படங்கள் அனைத்திலும் ஓவியங்கள் தவறாது இடம்பெற ஆரம்பித்தன. அதன் உச்சமாக வந்த படம் தான் Hana-bi. எனக்கு மிகப்பிடித்த கிடானோவின் படம்.

மிகப்பிடித்த கிடானோவின் காட்சியமைப்புகளில் ஒன்று. முழுப்படமும் பார்த்தாலொழிய இதன்வீரியம் புரியாது. சென்டிமென்ட் இசையைப் போலவே தோன்றக்கூடிய வாய்ப்பு ஏகத்துக்கும் உண்டு.



ஓகே. இதுவரை Arihantன் General Knowledge 2014 போல, செய்திகளாகவே பார்த்த உணர்வுதான் எனக்கிருக்கிறது. Hana-biக்குப் பிறகு அவர் எடுத்த படங்கள், அதுபற்றிய விஷயங்கள், மேல சொன்ன பல விஷயங்கள்....இவை அனைத்தும் எனக்குத் தெரிய வந்தது இந்த டாகுமென்டரி மூலமாகத்தான். அதனால், ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக இந்த டாகுமென்டரியை பார்த்துவிடுவதே நலம்.

Slim Shady, Beat Takeshi என்று Alter-Egoகளின் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அவர்கள் தங்களைத் தாங்களே பகடி செய்துகொள்வதாகட்டும், கட்டுடைத்துக் கொள்வதாகட்டும்..... அதுவொரு தனிஅனுபவம். பல இயக்குனர்களின் படங்களைப் பார்த்தவன் என்று முறையில் இதனைச் சொல்கிறேன்...இன்றைய உலக சினிமா அரங்கில் தகெஷி கிடானோ பாணியில் படமெடுக்கக்கூடிய ஒரே ஆள்......தகெஷி கிடானோ மட்டுமே. அவரது பாதிப்பை டாரண்டினோவில் ஆரம்பித்து.... நமது அனுராக் காஷ்யப், மிஷ்கின் வரை பலரிடமும் பார்க்கலாம். ஆனால், தகெஷி படங்களில் யாருடைய சாயலும், பாதிப்பும் துளிகூட கிடையாது. சர்வநிச்சயமாக இதனைச் சொல்ல முடியும். இதற்கு காரணம், அவர் “உலக திரைப்படங்களை” பார்த்து வளர்ந்த ஆள் இல்லை; திரைப்படங்கள் தொடர்பான படிப்பு படித்தவரில்லை; தொழில்நுட்பம் அறிந்த ஆள் இல்லை; இப்படிதான் சினிமா இருக்க வேண்டும், இங்குதான் ஷாட்டை முடிக்க வேண்டும், திரைக்கதை எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும், இப்படி பல வேண்டும்கள் பற்றிய எவ்வித முன்முடிவுகளோ, பழக்கமாமோ இல்லாத ஆள் அவர். இதுவே அவரது படங்களின் மிகப்பெரிய வரம்.தான் உள்வாங்கிய விஷயங்களை வெளிப்படுத்த அவருக்கு ஒரு மீடியம் தேவை. பெரும்பாலான சமயங்களில் சினிமாவை அதற்காக பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவே. வேறுதுறையை அவர் தேர்ந்தெடுத்திருந்தாலும் இப்படிதான் ஒரு ஆளுமையாக வளர்ந்திருப்பார். 

கிடானோ போன்ற “Auteur”களின் படைப்புகள் அனைத்துமே, சுய பிரதிபலிப்புகள் (Self Reflexive). வாழ்க்கை – சமூகம் - தத்துவவிசாரணைகள் – பாலினம் – சினிமா – இசை – அரசியல் என்று பல விஷயங்கள் பற்றிய அவர்களது பார்வைகள். இந்தப் பிரதிபலிப்பு என்பது வெறும் அழுகைக் காவியமாக இருந்தால் மட்டுமே மனதை பாதிக்கும்/நெகிழச் செய்யும் படைப்பு, என்ற குறுகிய சந்தில் வைத்து ஒரு படைப்பைப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எள்ளலாக/பகடியாக /பூடகமாக இருக்கலாம். படைப்பாளிகளைப் பொறுத்து அது மாறுபடும். ஹாலிவுட் போன்ற அமைப்பை எடுத்துக் கொண்டால், இதுபோன்ற பிரதிபலிப்புகளுக்கெல்லாம் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதன் காரணமாகவே ஹாலிவுட் Auteurகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் ப்ளாஸ்டிக் வாளிகளைப்போல (உவமை உபயதாரர்: சாரு) Production houseகளில் இருந்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்களை சுவாரசியமான காட்சிகள் மூலம் எப்படிக் கவர்வது......இதுதான் அவர்களது ஆகப்பெரிய நோக்கம். மற்றொரு முக்கிய விஷயம், திரைக்கதை. அது முற்றிலும் மற்றொருவரின் visionனாக இருக்கும். பல இடங்கள் மாறி கடைசியாக ஒரு இயக்குனரிடம் வந்து சேரும். ஸ்டூடியோக்களின் தலையீடுகளையும் சேர்த்துக்கொள்ளவும். இதில் அந்த இயக்குனரின் தனிப்பட்ட பிரதிபலிப்பு எங்கு இருந்துவிடப் போகிறது (வெகு அபூர்வமாக அப்படி நிகழ்வதும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை). Auteur என்பதை வைத்தே நூறு பதிவுகள் எழுதலாம். இப்படித்தான் இருக்க வேண்டும்...என்று எந்தளவுக்கு பார்த்துபார்த்து பிடிவாதத்துடன் படத்தை செதுக்குவார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறிய உதாரணம் - இதோ
இந்தவொரு விஷயத்தின் காரணமாகவே ஸ்கார்சேஸியை Auteurகளில் சேர்ப்பதில் மெல்லிய சிக்கல் உண்டு. அவரது பெரும்பாலான படங்களுக்கான திரைக்கதை அவருடையது கிடையாது. ஆனாலும் ஆரம்பகாலங்களில் அவரது மனநிலையை பிரதிபலிப்பது போன்ற திரைக்கதைகளயே தேர்ந்தெடுத்தார். பல திரைக்கதைகளை கூட சேர்ந்து மெருகேற்றவும் செய்தார். ஆனால் Gangs of new yorkகிற்குப் பிறகு அவரது படங்களில் அவரது தனிப்பட்ட பிரதிபலிப்புகள் பெருமளவில் குறைந்துபோய் – ஷாட் கட்ஸ், இசை, Poetic violence – போன்ற விஷயங்கள் மட்டும் எஞ்சியுள்ளது. அவரே பல இன்டர்வியுக்களில் இதனை ஒப்புக்கொண்டும் உள்ளார்.

அதனால், ஆத்தர்களின் படைப்புகளை பார்க்கும்பொழுது, அவர்கள், தாங்கள் உள்வாங்கியவற்றை கண்ணாடி போல பிரதிபலிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அக்கண்ணாடி அதிகப்படியான வெளிச்சத்தை உமிழலாம்; பாதரசம் போயிருக்கலாம்; திராபையான ஒளியைக் கொடுக்கலாம்; நம்மிடம் கூட பார்வைக் குறைபாடு இருக்கலாம். அதற்காக, நமக்கு பிடிக்கவில்லை – புரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய படைப்புகள் குப்பைகள் ஆகிவிடாது. திரைப்படம் என்றில்லாமல், இசை – ஓவியம் – இலக்கியம் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் தானே.



தனிமை, உச்சபட்ச வெறுப்பு, இயலாமை, வாழ்கையை எதிர்கொள்ளல் இந்தச்சிக்கல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறும் ஒரு கதாபாத்திரமாவது அவரது படங்களில் கண்டிப்பாக இருந்தே தீரும். அதேசமயம், அப்படியே அதற்கு நேர்மாதிரியான இன்னொரு கதாபாத்திரமும் அப்படங்களில் இருக்கும். அதுவும் ஒரு பெண்ணாகவே பெரும்பாலும் இருக்கும். Sonatine, Hana-bi போன்ற படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள். எங்கு தகெஷி மற்ற இயக்குனர்களது பாணியில் இருந்து மலையளவு வேறுபடுகிறார் என்றால், இந்தப் பத்தியின் முதல்வரியில் பார்த்த இவ்விஷயங்களை அவர் திரைமொழியாக்கும் விதம். எங்குமே அழுகையோ, உணர்ச்சியை கறக்கும் இசையோ எதுவும் இருக்காது. மாறாக பகடியாகத்தான் இருக்கும். For me comedy and violence has a lot in common. Just as you expect, comedy always lurks behind the most unexpected of circumstances என்றவர் சொன்னதன் காரணமும் இதுவே. (Black Comedy என்றொரு பதத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கமுடிகிறது. அதன் உச்சங்களில் ஒன்று கிடானோ. அவரது படங்களைப் பார்த்தாலொழிய அக்காட்சிகளைக் குறித்து பேசுவது மிகக்கடினமான ஒன்று)



இன்னொரு விஷயத்தையும் பலதடவை மேல குறிப்பிட்டிருந்த ஞாபகம். கட்டுடைத்தல். தகெஷியின் Takeshis படத்தை எடுத்துக்கொள்வோமே. இரண்டு பிரதான பாத்திரங்கள். பீட் தகெஷி மற்றும் தகெஷி கிடானோ. பீட் தகெஷி - புகழ்பெற்ற நடிகர். தகெஷி – ஸ்டூடியோவில் கோமாளி வேலைபார்க்கும் ஆள். தகெஷியின் முந்தைய படங்களின் காட்சியமைப்புகள், நடிகர்கள் முதற்கொண்டு அத்தனையும் படத்தில் வரும். ஒரு தகெஷி மற்றொரு தகெஷியை கொலை செய்யப்பார்க்கும் முயற்சிகள் எல்லாம் படத்தில் உண்டு. தன்னைத்தானே ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் பகடியின் மூலம் கட்டுடைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தப்படம் அட்டகாச உதாரணம். உலகளவில் இத்தகைய சர்ரியல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த படம் முழுவதுமே கிடானோ பார்வையாளர்களோடு ஆடும் ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம். எந்த கிடானோவை நாம் பார்க்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. பார்வையாளர்களை நக்கல் செய்யவே இந்தப் படத்தை அவர் எடுத்ததாக எனக்குப்படுகிறது. அதுவும் பிம்ப/ஹீரோயிச வழிபாடுகளில் பட்டம் வாங்கிய ஆட்கள் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டும். கிடானோவா....சே....என்னமாதிரி நடிகர்/இயக்குனர்....சான்சேயில்ல....என்று சிலாகிக்கும் அடுத்தநொடி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். மயிறு மாதிரி எடுத்திருக்கான் என்று நினைக்கத் தோன்றும். இந்த முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கிடானோ. 

திரைப்படங்கள் குறித்த எவ்வித முன்முடிவுகளும் தெரிவுகளும் இல்லாத ஆள் தகெஷி. அது தொழில்நுட்ப விஷயங்களாக இருந்தாலும் சரி; ஷாட் வைப்பதானாலும் சரி; இசையை பயன்படுத்தும்விதமாக இருந்தாலும் சரி. ஒரு மிகமிகச்சிறிய உதாரணம் இதோ. Hana-Bi படத்தில் வரும் இக்காட்சி. ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவியின் உடல்நிலைக் குறித்து, டாக்டரிடம் தகெஷி பேசிக்கொண்டிருப்பார். முந்தைய காட்சியில் நர்ஸ், வழக்கமான படங்கள் போல கேமராவிற்குள் வராமால்...அவர்களின் டேபிள் அருகே செல்வார். ஆனால் திரும்பி வரும்போது...அப்பொழுது கூட frameமிற்குள் இருக்க மாட்டார்...வந்து அமரும்போது..மிகச்சரியாக கேமராவின் நடுவில் out of focusல் சாவகாசமாக அமருவார். கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கு கேமரா அதேபோலவே இருக்கும். ஏன் இந்தக் காட்சியை இவ்வாறே இருக்க விட்டுவிட்டார் என்று எனக்கு தோன்றியதைச் சொல்லி...உங்கள் யோசனையை கெடுக்க விரும்பவில்லை. கிடானோவின் மொழியைப் புரிந்துகொண்டால் இதெல்லாம் வெகுசாதாரணம்.


அதேபோல, இந்தக் காட்சி. இசையையும் Cutsம். சினிமாவின் மிகஅடிப்படையான, எளிமையான நுட்பங்கள் மூலமே எத்தகைய விளைவை கிடானோவால் ஏற்படுத்த முடிகிறது ! கிடானோ பற்றி பேசும்பொழுது அவரது ஆஸ்தான/எனக்கும் மிகப்பிடித்த இசையமைப்பாளர் ஜோ ஹிசாஷி பற்றி சொல்லியே ஆகவேண்டும். ரொம்ப யோசிக்க வேண்டாம்..மற்றொரு ஜீனியஸ் ஹயோ மியஸாகியின் பிரதான இசையமைப்பாளரும் கூட. ஜோ ஹிசாஷியை இதுவரை கேட்டிராதவர்கள் இதிலிருந்து ஆரம்பியுங்கள். நிச்சயம் பிடித்துப்போகும். குறிப்பாக ராஜா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.



கிடானோவைப் பற்றி பக்கம்பக்கமாக, கஷ்டப்பட்டு வலிய திணித்த எழுத்து நடையில் எழுதிக்கொண்டே செல்லலாம். அதைவிட உத்தமம்.....இதோடு நிறுத்திக்கொள்வது. விஷ்வல் மீடியத்தை/அதன் ஒரு மிகப்பெரிய ஆளுமையைப் அவரது படங்கள் மூலம் தெரிந்துகொள்வது தானே நல்ல தொடக்கமாக இருக் முடியும்... ஒருவேளை நீங்கள் முதல்பாரா - இந்தப் பாரா என்று வந்திருந்தால, பதிவின் முதலில் இருக்கும் அந்த படத்தை மட்டும் சில நொடிகள் பாருங்கள். அந்த ரகளை/நக்கல்/வெறுமை/எதிர்பார்ப்பு/எத்தனிப்பு = கிடானோ

கிடானோவை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்றால், Outrage - Outrage beyond இரண்டில் இருந்தும் ஆரம்பித்தால் "சுவாரஸ்யமான" தொடக்கமாக அது அமையும். இந்த பதிவை ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்தது. ஏன் இத்தனை நாட்கள் கழித்து போஸ்ட் செய்கிறேன் என்றால்.....ஒரேயொரு காரணம்...Outrage Beyond. பலமுறை பார்த்த Outrageயை மீண்டும் பார்த்தமுடித்த கையேடு Beyond பார்த்தேன். அடுத்த பாகம் வேறு இதில் வரஉள்ளது. ஜப்பானிய Godfather என்று அடித்துக் கூறலாம். Outrage சீரிஸ் பற்றி தனிப்பதிவே போட்டுக் கொள்கிறேன் (Office Kitano, Kitano Castle - ரெண்டையும் கூகிள்ல அடித்துப்பாருங்களேன்).