Wednesday, March 26, 2014

என்ன தலைப்பு வைக்க, அறச்சீற்றம் ?


... humans, who were identified as life unworthy of life, including but not limited to the criminal, degenerate, dissident, feeble-minded, homosexual, idle, insane, and the weak, for elimination from the chain of heredity. More than 400,000 people were sterilized against their will, while 275,000 were killed under Action T4, a euthanasia program. 

1) சிம்மச் சந்திரன். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, சென்னை - பாண்டிச்சேரிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். கண்டக்டர் வந்து....தன்னுடைய இருக்கை..நீங்கள் எழுந்திருங்கள் என்று சொல்ல....மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இன்னொருவர் உக்கார்ந்திருக்கிறார், அந்த சீட்டை காலி செய்து எனக்கு கொடுங்கள்....என்று இவர் கேட்க....கண்டக்டர் பதிலுக்கு ஏதோ சொல்ல... இவரும் ஏதோ சொல்ல.... கண்டக்டர் சிம்மச்சந்திரனின் காலிப்பரை ஜன்னல் வழியாக வீசிவிடுகிறார். பஸ்சில் இருந்த சில ஜனங்கள் இறங்கி அதை எடுக்கு முயற்சிக்கும் போது..... யாராவது இறங்கினால்... அவர்களை விட்டுவிட்டு பேருந்து கிளம்பிவிடும்...என்று எச்சரிக்கிறார். சிம்மச்சந்திரனையே இறங்கிபோய் எடுத்துவருமாறு சொல்கிறார். இவரும் சிரமப்பட்டு இறங்கி போய் தன் ஸ்டிக்கை எடுக்கும்போது....கண்டக்டர் பஸ்சை விசிலடித்து கிளப்பிவிடுகிறார்.

2) பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆட்கள் - தங்களது உரிமைகளைப்பெற (இதையே போராட்டம் நடத்தித்தான் வெளியதெரிய வைக்க வேண்டிய நிலமை) போன வருடம் சென்னையில் போராட்டம் நடத்தியதுப் பற்றி பரவலாக செய்திகள் வந்தததை நம்மில் பலர் கவனித்திருக்கலாம். அந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவம் இது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்களை, போலீஸ் அரெஸ்ட் செய்கிறோம் என்று சொல்லி...வேனில் அழைத்து செல்கிறார்கள். அப்பறம், உங்களை அரெஸ்ட் செய்யவில்லை..அங்கிருந்து கிளப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சொல்லி....செங்கல்பட்டு வரை சென்று இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிடிவாதமாக இறங்க மறுத்து....சென்னைக்கு உள்ளேயே இறக்கி விடுங்கள் என்று கேட்கிறார்கள். சரியென்று சொல்லி...கண்ணகி சிலை பக்கத்தில் விட்டுவிடுகிறோம் என்று அழைத்துச் சென்று.....இரவு இரண்டரை மணிபோல ஒரு இடத்தில விட்டுவிடுகிறார்கள். கடற்காத்து அடிக்கவே, இவர்களும் கண்ணகி சிலை தான் போல என்று நினைத்து....விடியும்வரை அங்கயே இருந்துவிடுவது என்ற முடிவோடு...தூங்கி விடுகிறார்கள். காலையில் அந்தப்பக்கம் வந்த ஒருவர் சொல்லித்தான் தெரிகிறது...அது சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏதோவொரு ஊரின், சுடுகாட்டு பாதை என்று.


ஆட்டோகிராப் என்று ஒருபடம் வந்ததே....அந்த சமயத்தில் எல்லாம் இந்தளவிற்காவது தெளிவாக யோசிக்கத் தெரியாத உயிரினமாகத்தான் இருந்தேன். ஆனால் "ஒவ்வொரு பூக்களுமே' பாட்டை முதல்தடவை பார்க்கும்போதே ஒருவித எரிச்சலே ஏற்பட்டது (சேரன் நல்லது செய்வதாகக் நினைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு முறை அந்தப்பாடலைப் பார்க்கும் பொழுதும் ஒரு மெல்லிய எரிச்சலே ஏற்பட்டது/படுகிறது. நான் என்ன செய்வது). ஒரு ஷாட்டில், பார்வைகுறைபாடுள்ள ஆள் ஒருவர் வருவார். தேவையேயில்லாமல் அவர் கண்களுக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து...அழவிட்டு. என்ன சொல்ல வருகிறார்கள் ? மற்றவர்கள்/உயிரினங்கள் மீது அன்பு தானே வரவேண்டும்....ஏன் பச்சாதாபம் வர வேண்டும் ? இரண்டுக்கும் ஏக வித்தியாசம் உண்டல்லவா. நம்மைப் பார்த்து இன்னொருவர் பச்சாதாபப்படுகிறார் என்றால்...அங்கு முதலில் அடிபடுவது நம் சுயமரியாதை தான். நமக்கு எப்பொழுதும் பரிதாபப்பட (அதோடு, நமது உபதேசங்களை கொட்டவும்,  நான் இதெல்லாம் படிக்கிறேன்/பார்க்கிறேன்/கேட்கிறேன்/போட்டோ எடுக்கிறேன் - நமது அலைவரிசைக்கு மாற்றாக இருக்கும் ஆட்களை ஜாடைமாடையாக மட்டப்படுத்தவும்) எப்பொழுதும் ஒரு ஜந்து தேவைபட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படியான பரிதாப உணர்ச்சி....ஒரு எழவுக்கும் பயன்படாது என்பதுதான் நிஜம்.

அந்த ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியின் பார்ட் - 1 பாருங்கள். அந்தப் பெண்மணி ப்ளாட்ஃபாரத்தில் ஒருகாலை வைத்து....சின்ன தயக்கத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட குதித்து தான் கடந்து போகிறார். பார்க்கும்போதே சுருக்கென்று என்னமோ செய்கிறது. தினமும் அவர் இவ்வாறுதான் சென்றாக வேண்டும். கோட்டூர்புறத்திற்கு போக வீல்சேர் உள்ளே போகும் பஸ் என்று ஒன்றே ஒன்று தான் உள்ளது போல். இவரும் இன்னொரு பெண்மணியும் பத்து மணியில் இருந்து காத்திருக்கிறார்கள். பஸ் வந்தபாடில்லை. டைம் கீப்பரிடம் கேட்டால், அடுத்த வண்டி பனிரெண்டு மணிக்கு தான்; இதுதவிர வேறு வண்டியில்லை; ஒருவேளை உங்களுக்கு அந்தமாறி வீல் சேர் போகும் பஸ், வேறு பாய்ண்ட்ல் ஓடுவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று இவர்களிடமே கேட்கிறார். இதில் எத்தனை சிக்கல்கள்...எத்தனை மன உளைச்சல்கள் - ஒழுங்கான ப்ளாட்ஃபாரம் இல்லை, பஸ் இல்லை, உள்ள பஸ்களும் இவர்கள் ஏற வசதியாய் இல்லை, வேலைக்கு போயாக வேண்டும், ஆட்டோ மாதிரி வண்டிகளில் போனால் நிச்சயம் காசு அதிகமாகும். இதுவொரு செயின் ரியாக்ஷன் மாதிரி அவர்களது குடும்பம்வரை பாதித்துக்கொண்டே இருக்கும். வீட்டை விட்டு, வேலைக்கு - அன்றாடம் சராசரியான ஆட்கள் செய்யும் வேலை இது - போகும் அடிப்படை விஷயத்திற்கே இவர்கள் இவ்ளோ பாடுபட வேண்டியுள்ளது. இதில் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவது எத்தகையை ஒரு வன்முறையான செயலாக இருக்க முடியும் ? இதுபோன்ற ஒரு சம்பவத்தை ஏதேச்சையாக அன்றைக்கு பார்த்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்......நான் தான் இளகிய மனம்கொண்டவன் ஆயிற்றே......சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் படும்பாட்டை பார்த்தாலே லிட்டர் லிட்டராக கண்ணீர்விடும் புண்ணியாத்மா நான்.. இப்பொழுது கேட்கவும் வேண்டுமா...பொழக்கென்று அழுதுவிடுகிறேன். அவ்ளோதான். நமக்கும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொண்டு..என் பஸ் வந்ததும் ஓடிசென்று ஏறி...அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். இந்த அதீத உணர்ச்சிவசப்படுதலை விட்டுவிட்டு, ஒரு சக மனிதன் மற்றொரு சக மனிதனுக்கு என்ன செய்திருக்க முடியும் ? சரி, எனக்கு உடல்ரீதியாக சில வேலைகளை செய்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்களுக்கு அதில் பிரச்சனை உள்ளது...என்ன செய்யலாம் ? அவர்களை நான் மற்றொரு பஸ்சில் ஏற்றி விடலாமா.....முதலில் அவர்கள் நிச்சயமாக அதனை விரும்ப மாட்டார்கள் (ஏனென்று தெரிந்தவர்கள் இந்தப்பதிவை படிக்க வேண்டியதே இல்லை). அடுத்து, யார் அவர்களை இறக்கி விடுவது ?

மாறாக, போக்குவரத்து கழகத்திடம் சென்று இதுபற்றி ஏதாவது கேட்கவாவது செய்யலாம். பத்துபேர் கேட்டல், ஒரு சின்ன அசைவாவது இல்லாமலா போய்விடும் (ஆனால் நிஜத்தில் நூறுபேர் போய் கேட்டும்/போராடியும் இந்த விஷயம் பெருமளவு அப்படியே தான் உள்ளது). இந்தியாவின் ஒருசில மெட்ரோகளிலாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உண்டு (அது நிச்சயம் போதாது என்பது வேறுகதை). ஆனால், மற்ற எல்லா இடங்களிலும் மாற்றுதிறனாளிகள் யார் உதவியுமின்றி தங்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு குறைந்தபட்ச வசதிகளாவது இருக்கிறதா என்று பார்த்தால்.....ஒரு _______ம் இல்லை. பேங்க், ஸ்கூல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் இதே நிலைமை தான். ஒன்று, அவர்கள் மற்றவர்களது தயவை எதிர்பார்க்க வேண்டும். இல்லையென்றால், படுசிரமப்பட்டு உள்ளே சென்று..மிகுந்த ஆயாசத்துடன் அந்த வேலையை முடிக்க வேண்டும். இதிலேயே அவர்களுக்கு ஏகப்பட்ட நேர விரயமும், உடல் உழைப்பும் போய்விடும்.  இன்னமும் என்னால் மறக்க முடியாத விஷயம்...நான் படித்த பல்கலைகழகத்தில், பாத்ரூமில்.....மற்றொரு பிரிவைச் சேர்ந்த, போலியோ பாதிப்பிற்குள்ளான மாணவன் ஒருவன்.....உள்ளே தரையில் அந்த ஈரத்துடன் தவழ்ந்து தவழ்ந்து வந்து....சின்ன ப்ளாட்ஃபார்மில் ஏறி...பீங்கான் கோப்பை அருகே உக்கார்ந்து தான் யூரின் போயாக வேண்டும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும்பொழதே...பயங்கரமான நினைவுகளை இது கிளப்பிவிட்டுவிட்டது. என் வயசு தான் அவனுக்கும். மனிதனின் மிகஅடிப்படை தேவை - சிறுநீர் கழிப்பது. அந்த அடிப்படை தேவையை, காலில் உள்ள பிரச்சனையால், ஏகப்பட்ட சிரமத்தைக கடந்து தினமும் படிக்க வரும் ஒருவனுக்கு - சுலபமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு தானே நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்......ஆனால் இங்கு ஏன் எல்லாம் தலைகீழாக இருக்கிறது ? அதேபோல....பஸ் பிரயாணத்தின் போது - நமது அம்மாவோ/தங்கையோ/தோழியோ/சுற்றி இருக்கும் பெண்கள்....எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோமா ?


ஒருவீட்டில் உள்ள கழிப்பறையை /யார் அதை சுத்தம் செய்கிறார்கள் என்பதை வைத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் பற்றி சர்வ நிச்சயமாக சொல்லிவிட முடியும். அதேபோல, ஒரு நாடு பெரிய வல்லரசு நல்லரசு என்றால் அதன் அடிப்படை கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து சொல்லிவிடலாம். சத்தியமாக இது என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. அணுவுலை வேண்டும் என்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அனைத்தும் அதைத்தான் உபயோகிக்கிறது என்று சொல்கிறார்கள். சரி. போகட்டும். சந்தோஷம். ஆனால் வளந்த நாடுகளில்/ வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இப்படி மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் ஒண்ணுக்கு அடிக்க கூட இடம் தேடி ஓட வேண்டிய நிலைமையில்லையே ? அங்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பூர்த்திசெய்துவிட்டு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். நம் நாட்டில் செய்யப்பட வேண்டிய அடிப்படை விஷயங்களே ஏகத்துக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு.....

ஊமை, நொண்டி, அலி, மெண்டல்......இவர்களுக்கு எல்லாம் இந்தியா முழுவதும் ஒரே பெயர் தான். தனியாக தமிழ் ஊமை, கன்னட நொண்டி, மராத்திய அலி, பைத்தியம் என்று யாரும் மொழி/இனம்/ஜாதி/மாநிலத்தை வைத்தெல்லாம் இதில் பிரித்துபேசுவதில்லை. என்னவொரு ஒருமைப்பாடு.சகோதரதத்துவம். இதில் தமிழன், திராவிடம், ஹிந்தி , லொட்டு லொசுக்கு என்ற பேச்சு வேற. எரிச்சல் மண்டிக்கொண்டு தான் வருகிறது. உலகின் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை - நம் நாட்டுக் குழந்தை. இப்படிபிறப்பு முதல், வளரும் பொழுது பாலியல் கொடுமைகளில் ஆரம்பித்து...ஏகப்பட்ட பிரச்சனைகள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இதில் சத்துக்குறைபாடு வேறு இருந்தால்..... recoverable என்ற நிலையில் இருந்து ஒரேடியாக பலஆட்கள் irrecoverable நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

(நம்நாட்டில் அவர்கள் வாழ்கையை மிகுந்த சிரமத்திற்கு இடையே  தள்ளித்தான் ஆக வேண்டும். எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு அரசியல் கட்சியும், இதுவரை மாற்றுத்திறனாளிகள் குறித்த தெளிவான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் படுமோசம். தமிழ், திராவிடம், தனிக்கட்சி என்று பேசிப்பேசியே கண்ணெதிரே உள்ள பல முக்கிய விஷயங்களை கவனிப்பாதோ...பேசுவதோ இல்லை...ஓ..சாரி..நமக்குதான் எல்லாம் நன்றாகத்தானே உள்ளது (ஆண் என்றால் இன்னும் வசதி). நமக்கெதுக்கு இதுபற்றிய பேச்செல்லாம்....என் கவனம் எல்லாம் என் பெயரை கணேஷ் என்று எழுதுவதா...கணேசு என்று எழுதி என் தமிழ் ஆர்வத்தை நிரூபிப்பதா என்பதில் தான் இருக்கிறது. இதுவரை தமிழுக்காக ஒரு மயிரையும் கிழித்தது இல்லை. குறைந்தபட்சம் விக்கியில் என் துறை சார்ந்த கட்டுரை எழுதியிருப்பேனா என்றால்...அதுவும் இல்லை. ஆனால் பேச்சு மட்டும் வாய்கிழியும். செய்வதற்கும்/மாற்றப்பட வேண்டியதுற்கும் ஓராயிரம் விஷயங்கள் நம்முன்னாடி தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது)


இந்த பவர்பாய்ண்ட் - இந்திய சென்சஸ் டிபார்ட்மெண்டே தயாரித்தது. இதில் பல முக்கிய புள்ளிவிவரங்கள் உள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.

இன்னொரு பகீர் விஷயமும் உண்டு. இன்ஷுரன்ஸ். நானும் முடிந்தமட்டும் பல இன்ஷுரன்ஸ் கம்பனிகளின் தளத்திற்குச் சென்று பார்த்துவிட்டேன். ஒருசில இன்ஷுரன்ஸ் தவிர, பலதளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் இன்ஷுரன்ஸ் திட்டங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சரி, LIC - Indian Postal Insurance போன்றவைகளாவது மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி திட்டங்களைப் பற்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறதே என்று சந்தோசப்படும்பொழுது...பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியை சேர்ந்த - பார்வை குறைபாடுள்ள ஒரு வக்கீல், indian postal insuranceல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அவருடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - 5 லட்சம். ஆனால் அவருக்கோ....1 லட்சம் மட்டுமே. மற்றொரு கொடுமை....மாற்றுத்திறனாளிகள் அதிக ப்ரீமியம் தொகை செலுத்தியாக வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை......மருத்துவ செலவு, உபகரணங்கள், குடும்ப செலவு என்று ஏகப்பட்ட விஷயங்களோட சேர்த்து அவர்கள் ப்ரீமியம் தொகையை அதிகளவில் செலுத்தியாக வேண்டும். என்ன எழவு லாஜிக் இது என்று யாராவது விளக்கவும். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தாலும்..தற்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்ஷுரன்ஸ் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதை கொஞ்சம் விளக்கினால் நலம்
நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக - அமர்த்தியா சென், 2004ஆம் ஆண்டு உலக வங்கியின் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய....இக்கட்டுரையைச் சொல்லலாம்.
பொளேரென்று முகத்தில் அறை வாங்கியதைப் போன்ற உணர்வு பலஇடங்களில் நிச்சயம் எழுந்தே தீரும். முக்கியமாக இந்த வாக்கியங்கள் "Given what can be achieved through intelligent and humane intervention, it is amazing how inactive and smug most societies are about the prevalence of the unshared burden of disability". இதில் unshared burden....என்னைப் பொறுத்தவரை இந்த burdenனை எப்பொழுதுமே நாம் பலரும் தட்டிக்கழிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறோமேயன்றி....சுமையை பகிர்ந்துகொள்ள முயற்சிப்பதேயில்லை. உடல் உழைப்பு - பொருளாதாரம் - கல்வி என்று பலவிதங்களிலும் இதனை நாம் செய்ய முடியும். ஒரு வேலையைச் செய்தால்......பதிலுக்கு அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும்.....இப்படியாக மட்டுமே எனது யோசனைகள் எல்லாம் குறுகிக்கொண்டே வருவது எனக்கே நன்றாக தெரிகிறது (இதனை படிப்பவர்கள் சார்பிலெல்லாம் என்னால் கருத்து சொல்ல முடியாதுதானே... அதனால் நீங்களே இதனைப்பற்றி யோசித்துக்கொள்ளுங்கள்). இவருக்கு இந்த வேலையை செய்து கொடுப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்....இந்த பதிவை எழுதுவதால் எனக்கு என்ன கிடைக்கும்....யாருக்காவது பொருளாதாரரீதியிலான வேலை செய்தால் அதிலிருந்து என்ன கிடைக்கும்......ஒருவிதமான முதலீட்டு மனநிலைக்கு நான் பழகப்பட்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது.

இதில் மூன்று முக்கிய விஷயங்களை அமர்த்தியா சென் முன்வைக்கிறார்

1) Utilitarianism (தமிழில் என்ன ?) - தனிபட்ட மனிதர்களின் மகிழ்ச்சி/திருப்தி/சந்தோஷம் - இவைகளின் அடிப்படையில், ஒருவருக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை மதிப்பிடுவது

2) ஒருவரது பொருளாதார நிலைமையை வைத்து மதிப்பீடு செய்வது

3) மூன்றாவது - Rawlsian Theory of justice. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம், அவனுக்கான வெளி, உரிமைகள் அவனுக்கு அவனுக்கு விருப்பமான விஷயங்களின் மீது இருக்கும் தேர்வு...அடிப்படையான நல்லெண்ணங்கள் மூலம்....சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
Rawls's theory of justice revolves around the adaptation of two fundamental principles of justice which would, in turn, guarantee a just and morally acceptable society. The first principle guarantees the right of each person to have the most extensive basic liberty compatible with the liberty of others. The second principle states that social and economic positions are to be (a) to everyone's advantage and (b) open to all  - Source: Link

இந்த விஷயத்தை என்னால் எளிமையாக விளக்கமுடியவில்லை. தெரியவில்லை. ஓரளவுக்கு இதனை நான் புரிந்துகொள்ள இந்த வீடியோவும், இதுவும் உதவியது

(இதையெல்லாம் கணியன் பூங்குன்றனார் அப்போதே சொல்லிவிட்டார். பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இப்போது சொல்லப்படும் பல கோட்பாடுகளின் பீட்டா வெர்ஷனாக இதனைச் சொல்லலாம்)

மாற்றுத் திறனாளிகள் என்று வரும்பொழுது இந்த மூன்று விஷயங்களும் அடியோடு அடிபட்டு போய்விடுகிறது. ஒன்றும் வேண்டாம்.....திண்டுக்கல் மாதிரி ஒரு ஊரில் மாற்றுத்திறனாளி ஒருவர் சினிமா பார்க்க பிரியப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அதிலொரு பொழுதுபோக்கு...சந்தோஷம். கொஞ்சம் பணவசதிபடைத்தவராக இருந்தால், கார் - பிரத்தியேக சேர் என்று கொஞ்சமாவது சமாளிக்கலாம் (சரி, அப்படியே அவர் உள்ளே சென்றாலும்.....எப்படியான கழிவறை வசதி இருக்கும் ?). கொஞ்சம் பின்தங்கிய நிலையில் உள்ள ஆள் என்றால் சொல்லவே வேண்டாம். கைவண்டி போன்றவற்றை தான் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள். அவர்களால் எப்படி உள்ளே செல்ல முடியும் ? மிகச்சாதாரண ஒரு பொழுதுபோக்கு அம்சம்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.  இதுபோன்ற எந்த பிரச்சனையும் சந்திக்காத நாம்...படத்தின் இன்டர்வெல்லில் காண்பிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் ட்ரைலர் தரம் குறித்து காரசாரமாக விவாதித்திக் கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசத்தின் தாக்கம் குறித்து ஓரளவு நாம் யோசித்தாலே கொஞ்சமேனும் மாற்றம் ஏற்படும் என்று நம்பலாம். மற்றொரு மிகமுக்கியமான விஷயத்தையும் அமர்த்தியா சென் தனது பேச்சில் குறிப்பிடுகிறார். "Earning handicap & Conversion handicap". மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கிடைபப்தும்/ஒரு நிலையான வருமானம் வருவதிலும் உள்ள சிரமம் & வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், அந்த வருமானத்தை எவ்வாறு/எதற்காக செலவிடுகிறார்கள் என்பதும் தான் அது. இன்ஷுரன்ஸ் -  ஒரு நல்ல உதாரணம். தவிர, மாற்றுத்திறனாளிகளும்  அவர்களைச் சார்ந்தவர்களும் ஒரு வேலையை செய்ய - அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் - செலவிடப்படவேண்டிய நேரம் மிகதிகமாகவே உள்ளது. சொந்தமாக/பிற வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளை இந்த நேர விரயம் பெரிதும் பாதிக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதுயில்லை.





Jacques Audiard, மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உரிய மரியாதையோடும் உரிமைகளோடும் நடத்தும் ஃப்ரான்சில் Rust & Bone மாதிரியான படத்தை எடுப்பதற்கும், நம்நாட்டில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி/அவர்களை வைத்து எடுக்கப்படும் படத்திற்கும்/படைப்பிற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டுதானே. இங்கு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என்று பலரையும் கேவலமாகத்தான் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவே பயங்கர கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை எந்த சினிமாவும்/படைப்பும் நேர்மையாக, இந்தியாவில் பதிவு செய்துள்ளதாக எனக்குத்தெரியவில்லை. வரும் ஒன்றிரண்டு படைப்புகளும் "கவித்துவமான, யதார்த்த" வாழ்கையை பிரதிபலிப்பதாக நீங்கள் நம்ப, உங்களுக்கு பூரண உரிமை உண்டு. அதில் யாரும் தலையிடவே முடியாது. ஆனால் நிதர்சனம் அதுவல்ல ஐயா. மிகக்கொடுமையானது. மாற்றுத்திறனாலிகள் பலரும் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சகிப்புத்தன்மையை "யதார்த்தம்" என்று நம்பினால்....ஒன்றும் செய்ய முடியாது. நானும் இதுவரை ஒன்றுமே கிழித்துவிடவில்லை தான். அந்த கையாலாகாததனம்தான்...இப்படி போலிபாவனைகளுடன் கூடிய பதிவாக வந்திருக்கிறது. பொருளாதாரரீதியில் நான் ஏதாவது செய்வது கூட....நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றஉணர்வின் காரணமாகவே இருக்கும். Escapist mentality. தனிமனிதனுக்கும் - சமூகத்துக்கும் உள்ள இந்த கட்டமைப்பு பற்றி அடிக்கடி யோசிப்பது உண்டு. எப்பொழுதுமே ஒருவித எரிச்சலான மனநிலைக்கு அது கூட்டிச்சென்று விடுகிறது. சூது, காமம் - இது இரண்டிற்கும் தான் அதிகமாக பயப்படுவேன் என்று பாரதி சொன்னமாதிரி...."இந்த சமூகம் இருக்கே...."என்று ஆரம்பிப்பவர்களைக் கண்டு எனக்கு படுபயங்கர பயம் உண்டு. அப்படியே ஓடிவிடுவேன். சமூகம் என்ன MiBல் வரும் வேற்றுகிரகவாசியா.....எங்கிருந்தோ வந்து இங்கே இறங்கி....தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க. நான்/நீங்கள்/அவன்/அவள்/அது - இதானே சமூகம். Collective conscience தானே அது. நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு அதிர்வும் எங்காவது முடிந்துதானேயாக வேண்டும் ?

போன வருடம் சுப்ரீம் கோர்ட், அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இதுவே 1995ல் வந்த சட்டத்தின் விளைவாக 18 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு - இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை - வந்துள்ளது.
போன மாதம் Rights of persons with disabilities bill 2014 ஒன்று நடைமுறைக்கு வந்தது. இதுபற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இதன் சாதகபாதகங்கள் குறித்து இன்னும் நான் படிக்க வேண்டியுள்ளது
  1. Disabilities Bill tabled in Rajya Sabha
  2. Why are disability rights activists divided over the Disability Bill?

மேலும் சில முக்கிய லிங்க்கள்:

பிகு:
புதிய தலைமுறையில், ஒவ்வொரு ஞாயிறும் வரும் ரௌத்திரம் பழகு மிகநல்ல/அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்று. அதனை முன்னின்று நடத்துபவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும். ஒரேயொரு வேண்டுகோள். வாய்ஸ் ஓவரை அவர்கள் குறைத்தால்....நிகழ்ச்சி எங்கோ சென்றுவிடும். வாத்து மேய்க்கும் ஒருவரைப் பற்றி - போனவாரம் என்று ஞாபகம் - நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். நள்ளிரவு. அவர் தீவட்டியை பற்ற வைக்கிறார். இது எல்லாமே மிகத்தெளிவாக விஷ்வலாக தெரிகிறது. அதை ஏன் வாய்ஸ் ஓவரில் வேறு சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே ஒருவித சஞ்சலமாகவே இருந்தது. சரியாக, இந்த ரெண்டு வாரத்தில் இணையத்தில்/Facebookல் போட்டப்பட்ட சில பதிவுகளும் காமென்ட்களும்.....சற்று எரிச்சலை ஏற்படுத்திவிட்டது (நானெல்லாம் எரிச்சல்படுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை தான்).


Facebookers..

10 comments :

  1. என் வாய் அடைபட்டு விட்டது...

    ReplyDelete
  2. உங்களோட இந்த பதிவு - மனசுக்கு நெருடல் கொடுக்கற விசயத்த அழகா சொல்லி இருக்கிங்க.
    INCLUSION அப்பிடிங்கற கான்செப்ட் ஆ நம்ம அரசு கண்டுக்கறது இல்லை. Our government has to provide all facilities and resources to disabled people without discriminating anyone for any reason.

    நம்ம போய் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணாலும் அதை அவுங்க ஏத்துக்க மாட்டாங்க. மனநிலை சரி இல்லாதவங்க நிலைமை இன்னும் மோசம். தமிழ் படத்தலையும் இவங்க தினமும் படுற கஷ்டத்த யாரும் சொன்ன மாறி தெரில, ஒரு செண்டிமெண்ட் feature க்கு தான் உபயோகப் பட்டுருக்காங்க. நீங்க சொன்ன மாறி நம்ம ஊர் பெண்கள் பயணம் செய்யும் போது தண்ணி குடிக்க மாட்டாங்க. Again, it's a fantastic writing with proper statistics.

    ReplyDelete
  3. குற்ற உணர்ச்சியில் மனம் வருந்துகிறேன். இந்த துயரங்களை கண்டு எதுவுமே செய்யாமல் இருக்கும் எல்லாரும் மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தான்.

    ReplyDelete
  4. கொழந்தApril 3, 2014 at 2:30 AM

    கொஞ்சம் இதபத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே...எல்லாம் தானா நடக்கும்

    ReplyDelete
  5. கொழந்தApril 3, 2014 at 2:33 AM

    நீங்க எதுனா blog வெச்சிருக்கீங்க ??? இல்லாட்டி ஏன் ஒண்ணு ஆரம்பிக்க கூடாது...சில பாய்ண்ட்ஸ சுருக்கமா நறுக்குனு சொல்லிர்றீங்க

    ReplyDelete
  6. கொழந்தApril 3, 2014 at 2:34 AM

    அந்த குற்ற உணர்ச்சிய - எல்லாருக்கும் நிச்சயம் இருக்கும் - ஆக்கபூர்வமா எப்பிடி பயன்படுத்துறதுனு யோசிச்சாலே நெறைய மாற்றம் வரும்தான

    ReplyDelete
  7. நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு அதிர்வும் எங்காவது முடிந்துதானேயாக வேண்டும்? - Chaos Theory. The article is awesome. Your ability to link humans actions to chaos theory is stupendous.

    ReplyDelete
  8. However, our (Can we say our government efforts) fight to eliminate polio disease should also be commendable. If I am correct, UN has declared India to be a 0% polio-free nation.

    ReplyDelete
  9. மிக்க நன்றி ப்ரோ...

    ReplyDelete
  10. நிச்சயமா...ஆனா அது மட்டும் பத்தாதே....இன்னும் எவ்வளவோ செய்யலாம்ன்ற ஆதங்கம் தான. வேறென்ன

    ReplyDelete