Monday, August 19, 2013

The Act of Killing: Are we civilized ?

War crimes are defined by the winners. I am a winner. So i can make my own definitions

இது ஏதோ ஒரு சர்வாதிகாரி உதிர்த்த வார்த்தைகள் அல்ல. படத்தில் வரும் சாமான்ய கதாபாத்திரம் உதிர்க்கும் வார்த்தைகள். இந்தளவுக்கு என்னைச் சலனப்படுத்திய – வெகுவாக பாதித்த - கேள்விக்குள்ளாக்கிய படம்.....கிட்டத்தட்ட  எதுவுமே சட்டென்றுஞாபகத்திற்கு வர மறுக்கிறது. Hardest surrealistic film i've ever seen. சில படங்கள் நமது பார்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வல்லமை கொண்டது. சக மனிதர்கள் மீது என்ன மாதிரியான மதிப்பு வைத்திருக்கிறோம் ? என்னென்ன அளவுகோல்களின்படி அவர்களை அணுகுகிறோம் ? அடுத்தவர்களை காயப்படுத்தாமல் ஒரு idealistic மனநிலையில் வாழ்வது சாத்தியம் தானா ? என்பதில் தொடங்கி பக்கத்து தெரு - ஊர் - மாநிலம் - நாடு வரையில், மனிதன் என்ற உயிரினம் சக உயிரினத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், அடக்குமுறைகள் வரை ஏதாவதொரு சந்தர்பத்தில் பல கேள்விகள் எழுந்தே தீரும். ரோட்டில் நடந்துபோகும் போது ஏற்படும் சிறுசிறு சம்பவங்கள் கூட சிலசமயம் பெரிய கேள்விகளுக்கு வழிவகுக்கும் அல்லவா. அதுபோன்றதொரு அனுபவமே இந்தப்படம்.

த ஆக்ட் ஆஃப் கில்லிங்

சக மனிதன்/உயிரினங்கள் மீதான வன்முறை என்பது ஆதிகாலம் தொட்டே நமது உடம்பில் ஊறிய உணர்வு. ஆனால் அன்று அதற்கான காரணங்கள் வேறாக இருந்தது. மனித இனம் வளர வளர – குறிப்பாக இனக் குழுக்கள் பெருகப் பெருக, அமைப்புகளும் கூடவே பிரச்சனைகளும் பெருக ஆரம்பித்தன. இந்தக் குழுக்களின் வாயிலாகவே, நோம் சோம்ஸ்கி சொல்வது போல – ஒரு common medium/platformமிற்கான தேவையின் காரணமாக  – சமூகம் என்ற அமைப்புத் தோன்றியது. இந்த சமூக அமைப்பிலிருந்துதான் அரசு – ஆட்சி – அதிகாரம் போன்ற வரையறைகள் தோன்றின. மனித இனம் வளர வளர இந்த அமைப்பு பல்வேறு மாறுதல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இது இயற்கையான ஒன்றுதானே. இதுபோன்ற பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் மிகமுக்கிய பங்குவகித்தது(வகிக்கின்றது). அரசியலின் வாயிலாகவே அரசு – ஆட்சி – அதில் மக்களின் பங்கு போன்றவைகள் பற்றிய பார்வைகள் மாறத்தொடங்கின; இசங்களும் தோன்றின என்பது வரலாறு. இன்று, அரசியல் என்ற வார்த்தை அரசு – அதிகாரம் போன்றவைகளின் எல்லைகளைத் தாண்டி, டூத் ப்ரஷ் முதற்கொண்டு அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வரிகளில் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது- மக்களைப்போல் ராஜ்யம். ஆனால் யாருக்காக, எந்த மக்களுக்காக இந்த ஆட்சி - அரசு - அமைப்பு எல்லாம் தோற்றுவிக்கப்பட்டதோ-மாற்றி எழுதப்பட்டதோ, அம்மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்களிடம் மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கப்பெறும் பொழுது........எவ்வாறு நடந்து கொள்வார்கள் ? இன்றளவும் யாராலும் விடையளிக்க முடியாத கேள்வி இது. மாவோ & ஸ்டாலின் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஹிட்லர் ஆட்சியில் இறந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் ஆட்சியில் இறந்தவர்கள் அதிகம்.

actofkillin1

இந்தியாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு மிகப்பெரிய கலகம் நடந்து அதிகாரம்/அமைப்பு எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மைக் கேட்க, கட்டுக்குள் வைத்திருக்க யாரும் இல்லை. என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுவோம் ? இன்னும் விபரீதமாக யோசிப்போம். குறிப்பட்ட இன/மொழி/ஜாதி மக்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு கலகம் எழுப்பப்படுகிறது. அதனினும் மோசமாக அரசே அதனை முன்னின்று நடத்துகிறது (சீக்கியர்கள்/குஜராத் கலவரம் எல்லாம் ஞாபகம் வந்தால்....அது தற்செயலானதே). மக்களாகிய நாம் எப்படி நடந்து கொள்வோம் ?

பெல்லா தாரின் Wereckmeister harmonies, வேறொரு பரிணாமத்தில்  மேற்கூறிய கேள்விகளை எழுப்பிய படம். முன்பு நான் பார்த்து புரிந்துகொண்டதைவிட  இப்பொழுதுதான் அதன் முழுவீரியமும் புரிகிறது.


எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில், காந்தி மட்டுமே இதுகுறித்து மிகத்தீவிரமாக கேள்விகளை எழுப்பியவர். குழு மனப்பான்மை(Mob psychology) எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை பல்வேறு தளங்களில் வைத்துப் பேசியவர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவர் சொன்னதுதான் - Be the change that you wish to see in the world. ஆரம்பகாலம் தொட்டே இந்தவொரு விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருந்தார். இது சரியாக புரிந்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பலவாறு விமர்சிக்கப்பட்டார். சௌரி சௌரா நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1922 ஃபிப்ரவரி 4. காந்தியின் தலைமையில் பல மாதங்களாக ஒத்துழையாமை போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. உத்தர்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்றொரு பகுதி. போலீஸுக்கும் – போராட்டத்தில் பங்குபெற்ற மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்று பொதுமக்கள் இறக்க நேரிடுகிறது. கொதிப்படைந்த மக்கள், போலீஸ்ஸ்டேஷனுக்கு தீ வைத்ததில் 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகின்றனர். காந்தியை இந்நிகழ்வு வெகுவாக பாதிக்கிறது. உடனே ஒத்துழையாமை போராட்டத்தை கைவிடுகிறார்.காந்தியின் இந்த முடிவை போஸ், நேரு உட்பட பலரும் மிகக்கடுமையாக விமர்சித்தனர் (To sound the order of retreat just when public enthusiasm was reaching the boiling point was nothing short of a national calamity - Bose).

இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் ஹைகோர்டில் காந்தி தனது முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் “பம்பாய், சென்னை, சௌரி சௌரா முதலான இடங்களில் நிகழ்ந்த வன்முறை செயல்களுக்கு நான்தான் பொறுப்பு என்று அட்வகேட் ஜெனரல் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதைபற்றி பலவாறு சிந்தித்தும், என்னையே ஆராய்ந்து பார்த்தும் நான் தெரிந்து கொண்டது, மக்கள் அஹிம்சை வழிக்கு பழகும் முன்னரே அவர்களை அவசரப்படுத்தி விட்டேன்....” என்று  ஆரம்பித்து மிகத்தெளிவாக தனது நிலைபாட்டை முன்வைக்கிறார் (இங்கே படிக்கலாம்). இன்றளவும் காந்தியின் இந்த முடிவை மிகப்பெரிய தவறாக பலரும் கூறுகின்றனர். ஆனால் காந்தி பிரிட்டிஷ் – விடுதலை – காங்கிரஸ் என்பதையெல்லாம் தாண்டி, ஒன்றில் மிகத்தெளிவாக இருந்தார். Civic responsibility – மக்களின் பொறுப்புகள். பொறுப்புணர்வு குறித்து பல இடங்களில் அவர் சொன்னதான் சாராம்சமாக இதைச் சொல்லலாம் “ஒரு நாட்டின் சுயராஜ்யம் என்பது  அம்மக்கள் ஒவ்வொருவரும் எய்தியுள்ள சுயாட்சியின் – தம்மை அடக்கியாளுதளின் மொத்தத் தொகையே  (Swaraj of a people means the sum total of the self-rule of individuals & Swaraj can only be achieved through an all-round consciousness of the masses)“. இந்த முக்கிய விஷயத்தை குழப்பாமல் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. காந்தியின் சுயராஜ்யம் -> பொறுப்புகள் பற்றிய கருத்துக்களில் மிகமுக்கியமானவைகள் சிலவற்றை இங்கே படித்துப் பார்க்கலாம். இன்னொரு இடைச்செருகல்: காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1920களில் 15 -16 வயதான, பஞ்சாபை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். காந்தி போராட்டத்தை கைவிட்டது அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம்தான் பின்னாளில் அவர்களின் பாதையைத் தீர்மானித்தது என்றுகூட சொல்லலாம். அந்தச் சிறுவர்கள், பகத் சிங் & சுக்தேவ்

1965களின் பிற்பகுதி. இந்தோனேசியாவில் சுகர்னோவின் ஆட்சியை கலகத்தின் மூலம் ராணுவம் கைப்பற்றுகிறது. வழக்கம்போல் ஆரம்பகாலங்களில் நல்லாட்சி அதுஇது என்று பேசியவர்கள் கொஞ்சநாட்களில் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். ராணுவத்தையும் அதன் ஆட்சி முறைகளையும் விமர்சிப்பவர்கள் அனைவைரும் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------

குறிப்பாக ஏன் கம்யூனிஸ்ட்களைக் கண்டு இவ்ளோ பயம், கோபம், வெறுப்பு ? 1960 – 1970களை உலக வரலாற்றின் மிகமிக முக்கியமான ஆண்டுகள் எனச் சொல்லலாம். மாவோ சீனாவில் மிகப் பலமாக காலூண்டியதாகட்டும், கியுபா – அமெரிக்காவிற்குமான பிரச்சனை, சே குவராவின் எழுச்சி, அல்ஜீரிய/தென் அமெரிக்க நாடுகளின் உள்நாட்டு போர், வியட்நாம் போர், மார்டின் லூதர் கிங்ன் போராட்டம் என்பதில் ஆரம்பித்து கலை – இசை – இலக்கியம் - அறிவியல் என்று எல்லாத்தளங்களிலும் மாற்றம் நிகழ்ந்த வருடங்கள் இவைகள். திரைப்படங்கள், விண்வெளி யுத்தம், ஹிப்பி’ஸ், கே உரிமைகள், பெண்ணிய சிந்தனைகள், போஸ்ட்மாடர்ன் சிந்தனைகள் உச்சத்திற்கு சென்றது என்று ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கலாம். சமகால உலக வரலாறு/அரசியலைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் 1960களைப் பற்றிப் படித்தாலே போதுமானது. ஏற்கனவே ரஷ்ய புரட்சிக்குப் பிறகு பல நாடுகளில் கம்யூனிஸ்ம் வெகுமாக மக்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது. பிற்பாடு, மாவோவின் எழுச்சியும் சேர்ந்து கொள்ள ஒவ்வொரு நாடாக மாவோயிசம்/கம்யூனிஸம் பரவத் தொடங்கியது. 60களில் தென்னமெரிக்க நாடுகளிலும் க்யுபா  போன்ற நாட்டிலும் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து கொள்ள பல நாடுகள் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் வந்தன. இந்தியாவிலும் நம்பூத்ரிபட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மாதிரியான ஆட்கள் தீவிரமாக களத்தில் இறங்க ஆரம்பித்தது பின்-ஐம்பதுகளில் தான்.


இந்தளவிற்கு கம்யூனிஸ்ம் பரவுவதை, யார் படுபயங்கர எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருப்பான் ? சாட்சாத் நமது பெரியண்ணன் + அவர்தம் கூட்டாளிகள் தான். பொலிவியாவில் ஆரம்பித்து எந்தெந்த நாடுகளில் எல்லாம் கம்யூனிஸம் வளருவது போல் தெரிகிறதோ அங்கெல்லாம் அதனைத் தடுக்க மிகமிக தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அநேகமாக அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தோனேஷியாவிலும் இவர்களுது கைங்கரியம் பலமாக உண்டு. ஆனால் மிகமிக சொற்பமாகவே இந்தோனேஷியப் படுகொலைகள் உலகளவில் பேசப்பட்டிருக்கிறது. நம்மிலேயே எத்தனை பேர் இதுவரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ?

-----------------------------------------------------------------------------------------

அப்படி கம்யூனிஸ்ட்களாகக் "கண்டறியப்பட்ட" அனைவரையும் இந்தோனேஷியா ராணுவமும் அவர்களின் ஆதரவுடன் செயல்பட்ட லோக்கல் குழுக்களும் என்ன செய்தன என்பது குறித்தான தேடல்தான் இந்தப் படம். 2004ஆம் ஆண்டில் ஜோஷ்வா ஓபன்ஹைமர், இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் உலகமயமாக்கலின் விளைவு -> யூனியன் பிரச்சனை குறித்தான ஆவணப்படம் எடுப்பதில் முனைந்திருக்கிறார். அங்கு யூனியன் போன்ற விஷயங்களைக் குறித்து பேசவே அந்த மக்கள் அச்சப்பட.......ஏன் என்று விசாரிக்கும் போதுதான் எந்தளவுக்கு இந்தப் படுகொலையின் கோரப்பிடியில் இந்தோனேஷியா 1965ல் சிக்கியிருந்தது என்பது அவருக்கு உறைக்க ஆரம்பிக்கிறது. இதை எப்படியாவது பதிவு செய்தாக வேண்டிய கடமை தனக்கிருப்பதாக உணர்ந்தேன் என்று ஜோஷ்வா கூறுகிறார். காரணம்......அவரின் குடும்பத்தினர் நாஜிகளால் பெருமளவில் பாதிப்படைந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தபொழுது, அச்சத்தின் காரணமாக மக்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். சரி...இவர்களை விட யார் இந்தக் கொடுமைகளை செய்தார்களோ அவர்களையே பேட்டி கண்டால் என்ன என்று தோன்றி......அவர்களை அணுகுகிறார். இந்த முக்கிய முடிவு ஆவணப்படத்தின் போக்கையே மாற்றுகிறது. எந்த படுகொலைகளைப் பற்றி பேச மக்கள் பயந்தார்களோ.......அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்கள் ஜோஷ்வாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து.....அவரை வரவேற்று எப்படி எப்படியெல்லாம் “கம்யூனிஸ்ட் புல்லுருவிகளை, அரக்கர்களை, கொலைகாரர்களை” அம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் உன்னத வேலையை செய்தோம் என்று மிகமிக விலாவரியாக, பேருவகையுடன் கூற ஆரம்பிக்கின்றனர். ஜோஷ்வா மிரட்சியுடன் இந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறுகிறார் “I felt  if i had walked into Nazi Germany 40 years later....with the Nazis still running the country and the Gestapo considered national heroes”. இப்படி அவர் சந்திக்க ஆரம்பித்த நபர்கள் 1,2,3,10,20,40......என்று நீண்டுகொண்டே செல்கிறது. அப்பிடி அவர் 41வதாக சந்தித்த நபர்தான் அன்வார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்த உங்களையும் என்னையும் போன்ற சாமான்யன். எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகன். கம்யூனிஸ்ட்கள் என்று கண்டறியப்படும் நபர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்ட பின்னர் ஒரு பெரிய தலைவன் நிலைக்கு உயர்கிறான்.

அன்வார்: முதலில் பிடித்து வரப்படும் நபர்களை தாறுமாறாக அடித்தே கொல்வோம். இங்குதான் ஒரு சின்ன சிக்கல். அந்த இடம் முழுக்க ரத்தவெள்ளமாக காட்சியளிக்கும். சுத்தப்படுத்தினாலும் வாடை போகாது. இந்த ரத்தவாடைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து ஒருபுது உத்தியை செயல்படுத்தத் தொடங்கினேன்.



என் வாழ்கையில் எத்தனனையோ திரைப்படக் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக்காட்சி அளவிற்கு என்னை பாதித்த காட்சிகள் மிகமிகக்குறைவு. எப்படி கொன்றேன் என்பதை சொல்லி முடித்த அடுத்தநொடி.........அன்வார் ஆடும் ஆட்டம். உலகின் எப்பேர்ப்பட்ட கலைஞனாலும் இந்தக் காட்சியின் கனத்தை இசையாகவோ, ஓவியமாகவோ, வார்த்தைகளாகவோ வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனித மனம் ஏன் இத்தணை விசித்திரமாக நடந்து கொள்கிறது ? ஒரு சாதாரண டிக்கட் கிழித்துக்கொண்டிருந்த ஆசாமி. காலில் அடிபட்ட வாத்திற்காக இரக்கப்படும் ஆள்(ஹிட்லருக்கு விலங்குகள் மீது அளப்பரிய பிரியம் உண்டு).  மற்ற நேரங்களில் சாதாரண ஆட்களாகத் தான் அன்வார் போன்ற ஆட்கள் நடந்து கொள்கிறார்கள். இந்தளவுக்கு வெறி, வன்முறை எங்கிருந்து வந்தது ? எங்கே இந்த தவறு நிகழ்ந்தது ? இதற்கு யாரைக் குற்றம் சாட்ட முடியும் ?

இந்த அன்வாருக்கு சினிமா மீது பயங்கர ஆர்வம் இருப்பதால், ஜோஷ்வாவுக்கு முழுஒத்துழைப்புத் தருகிறான். அதற்கும் ஒருபடி மேலே போய், தாங்கள் செய்த விஷயங்களை திரையில் மீள்கொணர விரும்புகிறான். ஆம்...அவ்விஷயங்களையே திரைப்படமாக்க விரும்புகிறான். அதற்கான “நடிகர்களையும்”, உடை முதற்கொண்டு அனைத்தும் அவனே தேர்ந்தேடுக்கிறான். அவர்களனைவரும் ஒருவிஷயத்தில் மட்டும் தீர்க்கமாக உள்ளார்கள். எண்ண ஆனாலும் சரி, உண்மையை மட்டுமே திரையில் காண்பிப்பது. கொலையாளிகளே கொல்லப்பட்டவர்களாக திரையில் உலா வர ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமாக தாங்கள் செய்தவைகளை நடித்துக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் யாருடைய படத்தைப் பார்க்கிறோம், ஜோஷ்வாவினுடயதா - அன்வாரினுடையதா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. மிகப்பெரும் திகிலூட்டும் mazeற்குள் மாட்டிக்கொண்டதைப் போன்றதொரு சர்ரியலிஸ உணர்வு முழுவதுமாக நம்மைச் சூழ்ந்துவிடும். ஆரம்பத்தில் ஒன்றும் அவ்வளவு ‘சுவாரசியாமாக’த் தெரியாத காட்சிகள், அதன் வீரியம் உறைக்க உறைக்க – யாராக இருந்தாலும் பாதிக்காமல் போகாது. மனித உளவியலின் மீது ஏகத்துக்கும் கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பும் காட்சிகள். போகிறபோக்கில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்......அவ்வளவு அப்பட்டம். Naked. படத்தில் மலிவாக நமது உணர்ச்சிகளை தூண்டும் காட்சிகள் எதுவுமே இல்லை. நேரடியான வன்முறை இல்லை. ரத்தம் இல்லை. ஆனாலும் எல்லாவற்றையும் மீறிய தாக்கம் படத்தில் உண்டு. பிற்பகுதியில் அன்வாரின் அண்டை வீடுக்காரரான சுரயோனோ என்ற கதாபாத்திரம் படத்தை எடுக்க சில யோசனைகளை தெரிவிப்பார். சிரித்துக் கொண்டே...தனது வளர்ப்புத் தந்தை எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தனது ஆற்றாமையை கொட்டித் தீர்த்துவிடுவார். இது இயக்குனருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட ஒன்று. இதை ஷூட் செய்த மூன்று வருடத்திற்குள் உடல்நலக் குறைவு காரணமாக சுரயோனோ இறந்து விடுகிறார். ஜோஷ்வா அவரது மனைவியிடம், இந்தக் காட்சியை வைப்பதா, இதைப்பற்றி எதுவும் சொன்னாரா.....என்ற கேட்டதற்கு அவர் மனைவி சொன்னது “Yes, he had this awful experience as a child, and wanted it to be seen, wanted the public to know what he went through”. இந்தப் படத்தின் அடிநாதமே இதுதான். இந்த வழிலாவது உலகத்திற்கு தாங்கள் அனுபவித்த கொடுமைகளை கொட்டித்தீர்த்துவிட வேண்டும். அன்வார் போன்ற ஆட்களும் இதையே செய்ய விரும்புகின்றனர். எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து இதனைச் செய்கிறார்கள். நிதர்சனத்தில் இருந்து தப்பிக்கும் மனநிலை. வெளிப்படையாக இதனை அவர்கள் சொல்லாவிட்டாலும் பல காட்சிகள் இதனை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அன்வாரின் சிஷ்யனாக வரும் ஹெர்மானைப் பற்றி தனிபபதிவே எழுத வேண்டும். அத்தனை விஷயங்கள் உண்டு ஹெர்மானிடம்.

actofkilling_2

படத்தைப் பற்றிய இன்னொரு மிகமுக்கியமான விஷயம், கிட்டத்தட்ட 1000 பேர் வரை கொலை செய்த அன்வாரில் இருந்து யாரையும் ஒருபக்க சார்பாக சாடுவதில்லை. நூற்றுக்கணக்கான கொலையாளிகளில் அன்வாரும் ஒருவன். அவ்வளவே. எங்கே படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்றால்.....ஏன் ? ஏன் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும் பொழுது. அன்வார் போன்ற ஆட்கள் எல்லாம் - அது கம்யூனிஸ் அரசாகட்டும், எந்தவொரு அரசாகட்டும் – எல்லா அரசுகளுக்கும்/கட்சிகளுக்கும்/கொள்கைவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கும்,மசூதியை இடிக்கவும் ரயிலைக் கொளுத்தவும் குடிசைகளுக்கு தீவைக்கவும் தேவை. இதில் ஒருசிலரை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாதே. இதுவொரு மிகசிக்கலான கட்டமைப்பு. வரலாற்றை புரட்டிப் பார்த்தல் ஒருநாடு கூட இத்தகைய சிக்கல்களில் இருந்து தப்பவில்லை என்பது புரியும்.

பார்ப்பவர்களுக்கு ஏன் சில உறுத்தல்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது என்றால், மறைமுகமாக நமக்கும் சகமனிதன் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களில் பங்குள்ளது என்ற உண்மை உறைப்பதனால் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். ஆப்ரிக்க வைரச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஆள் முதல் நம்மூரில் மலம் அள்ளும் ஆள் வரை, நாம் வசதியாக இருக்க ஏதாவதொரு மூலையில் ஒரு மனிதன் கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நமக்கு இதெல்லாம் மிகநன்றாகவே தெரியும் (தெரிய வேண்டும்). இருந்தும், இப்படி மனிதாபிமான போர்வையில் பதிவுகளை எழுதிவிட்டு, நிதர்சனத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்லவே விரும்புகிறோம். இதற்குமேல், உளமார சொல்கிறேன்....இந்தப் படத்தை பற்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. பார்த்துமுடித்தவுடன் பல்வேறு கேள்விகள் மட்டுமே தலை முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது. “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை என்ன காரணத்திற்காக சில பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் ஏழெட்டு வருடமாக திணறிக் கொண்டிருக்கிறேனோ....அதே காரணம் தான்.

மிகமிக முக்கியமானதொரு விஷயம், கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக "திரைப்படங்களின்" மூலமே பெருமளவில் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. சினிமா பொழுதுபோக்கு தானே என்ற ஜல்லித்தனமான கோஷம் எப்பொழுதுமே கடும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமைக் குழுக்கள், இந்தோனேஷியா அரசை பகிரங்க மன்னிப்பு கேட்டக் கோரியும் அவர்களுது வரலாற்றில் இந்தப் படுகொலைகளை பதிவுசெய்யக் கோரியும் வற்புறுத்தி வருகின்றனர். இலங்கை, இந்தோனேஷியா, அர்மேனியா, போஸ்னியா என்று எந்த நாடாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகாட்டும்.........உண்மையான சமத்துவம் அடக்குமுறைகளில் தானே நிலவுகிறது. அதனால் இப்படத்தை பார்க்கும் போது அதன் புவியில்பரப்பைப் பற்றியெல்லாம் கவனிக்கத் தோன்றாது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தப் படத்தைப் பார்ப்பது நமது கடமை என்றே தோன்றுகிறது.

ருவாண்டா இனப்படுகொலை
ருவாண்டா இனப்படுகொலையில் பாதிப்படைந்த ஒரு சிறுவன்

சமீபத்தில், இந்த செய்தியை படிக்க நேர்ந்தது. Young India irony: 75% will vote but 52% support dictatorship தாங்கமுடியாத கடுப்பைக் கிளப்பிய செய்தி இது. சே குவாரா டிஷர்ட்டை அணிந்தாலே போராளி என்ற நினைப்பிருப்பவர்கள் தான் இதற்கு ஆதரவாக ஓட்டு போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். Dictatorshipன் அடிச்சுவடு கூட தெரியாத ஆட்கள் இவர்கள். ஒருபக்கம் Save tamilsல் ஆரம்பித்து காஸா வரை என்று உருக்கமாக ஃபேஸ்புக் முழுவதும் செய்திகளை பகிர்கிறார்கள். இன்னொரு பக்கம் – சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்கள். என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. கொஞ்சம்கூட அடிப்படை புரிதல்கள் இல்லாமல் விடலைத்தனமான மனநிலையில் விஷயங்களை அணுகுவதால் ஏற்படும் விளைவுகள் இவை. ஜனநாயகம் பற்றி காந்தி சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது There is no human institution but has its dangers. The greater the institution the greater the chances of abuse. Democracy is a great institution and therefore it is liable to be greatly abused. The remedy, therefore, is not avoidance of democracy but reduction of possibility of abuse to a minimum. சை.....ஜனநாயகத்தைப் பத்தி பேசுவது தற்போது out of fashion & trendiness இல்லாத விஷயம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன்.
மனிதன் அமைத்த எந்தவொரு நிறுவனமானாலும் அதற்குரிய ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அந்நிறுவனம் எவ்வளவு பெரிதாய் இருக்கின்றதோ அவ்வளவுக்கு அதில் ஆபத்துக்களும் மிகஅதிகம். ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். பிழைகள் நிகழ ஏரளாமான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆனால் இதற்கான பரிகாரம் ஜனநாயகத்தையே தவிர்ப்பதில் இல்லை. மாறாக அதில் நிகழும் தவறுகளை முடிந்தளவில் குறைக்கப் பார்ப்பதே ஆகும்

  • படத்தை இந்த டொராண்டல் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் - Torrent link

Facebookers..

10 comments :

  1. உங்க கிட்ட புடிச்சதே, இந்தமாதிரி தொடக்கத்துக்கு முன்னாடி நீங்க குடுக்குற பெரிய பெரிய லெக்சர்கள் தான்,

    மத்தபடி படிக்கும் போது ஒரு குழப்பம் வருது, இது டாக்குமெண்ட்ரி வகைல வருமா , வண்முறைகளை வார்த்தைகளால விவரிச்சிருக்காங்களா, வார்த்தைகள் தான்னா, அதுக்கே இவ்ளோ வீரியமா ஒரு கட்டுரைன்னா, அத உடனடியே பாத்தாகனும்.

    சோளகர் தொட்டியைப் படிக்க முடியாதவர், இந்தப் படத்தை பாத்து பாதிப்படைஞ்சதைப் பத்தி எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. அதான் முக்கிமுக்கி எழுதியிருக்கேனே......என் சக்திக்கு அவ்ளோதான் வார்த்தைகள் சிக்குச்சு..நீங்க படம் பாருங்க..அத யாரலும் விவரிக்க முடியாது..ரொம்பரொம்ப கஷ்டம்

    ReplyDelete
  3. கொழந்த, நான் இதை பார்க்க ஆரம்பித்து,அதற்கான இன்வால்மெண்ட் மூட் இல்லாததால் பின்னர் பார்க்கலாம் என வைத்துவிட்டேன்,உண்மையிலேயே போர் குற்றங்களைப்பற்றி அறிய இது போல உண்மைக்கு வெகு அருகே பயணிக்கும் படியான ஆவணப்படங்களே வரவேண்டும்,சினிமா எடுப்பதையே பெரிய தொழிலாக செய்யும் நாடு,வெட்கக்கேடு உண்மைக்கு அருகே பயணிக்கும் படியான ஒரு ஆவணப்படமும் கிடையாது,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,இந்திய சீனப்போர்,இந்திய பாகிஸ்தான் போர் போன்ற காலகட்டத்தில் நம்நாட்டிலும் எதிரி நாட்டிலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள்,போர்கைதிகளாக வாடுவோர்.மதக்கலவரங்களில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள்,எமர்ஜென்சி சமயத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பேர்கள்,அவர்கள் உயிர்களுக்கு நினைவேந்தல் செய்யும் வண்ணம் நல்ல ஆவணப்படங்கள் நம்மிடம் உள்ளதா?வெட்கக்கேடு,எல்லாமே ஒன்று வழவழா கொழகொழாவென இருக்கிறது,அல்லது அரைவேக்காடாக இருக்கிறது,அல்லது ஓவர் டோஸாக இருக்கிறது.சுமார் 4லட்சம் பெண்கள் வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினராலும் அவர்களுக்கு உதவிய ரஜாக்கர்களாலும் வன்புணர்வு செய்யப்பட்டனர்,பல்கலைக்கழக ஹாஸ்டலில் படித்த 600 இளம்பெண்கள் கைகால்கள் கட்டப்பட்டு சுமார் 9மாத காலம் வரை பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர்,25000 க்கும் மேல் அனாதை குழந்தைகள் பிறந்த்தன,ஆனால் மேற்சொன்ன கொடூரங்களை பற்றிய ஒரு ஆவணப்படமும் நம்மிடம் கிடையாது.

    ReplyDelete
  4. செம கமென்ட் இது...வார்த்தைக்கு வார்த்த வழிமொழிகிறேன்..

    ஆனா நம்மூர்ல படம் எடுக்கணும்னு நெனச்சாலும்..வுட மாட்டாங்க என்பதையும் பாக்கணும்ல..ஆனா எடுக்கணும்னு நினச்சா எடுத்திறலாம்.எத்தன கொடுமைகள் நடந்த ஊர் இது

    ReplyDelete
  5. அற்புதம் நண்பா .,

    ReplyDelete
  6. இந்த படத்தை பார்க்கும் மணோதைரியம் எனக்கு இல்லை. இந்த படத்தை promote செய்ததற்காக என் comment யை இங்கு பதிவு செய்கிறேன்.

    kannan
    from abu dhabi.
    http://samykannan.blogspot.ae/

    ReplyDelete
  7. Did You see The Killing Fields? - compromised but nearby truth.

    ReplyDelete
  8. உங்க வார்த்தைகளை படித்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீள வில்லை நான்.. இதற்கே இவ்வளவு என்றால் படம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பு எப்படியோ..? டவுன்லோடு போட்டிருக்கிறேன்.. கண்டிப்பாக பார்ப்பேன் அண்ணா..

    மிகவும் சமூகப் பொறுப்புடனும், நியாயமான கோவத்துடனும் இந்த அற்புதப் பதிவை எழுதி இருக்கீங்க.. உங்களின் வாசகன்/ரசிகன் என்ற முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன்..!!

    ReplyDelete
  9. அவ்வப்போது சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் ஏதாவது மொக்கை படங்களைத் தயாரிப்பது வழக்கம்... அப்படியிருப்பவர்களில் யாராவது ஒருவர் முன்வந்து இதுபோன்ற ஆவணப் படங்களை எடுத்தால் தான் உண்டு..!!
    நானும் இப்படத்தைப் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன்.

    ReplyDelete
  10. […] நாம் நாகரீகமானவர்கள்தானா? […]

    ReplyDelete