தட்கல் தொல்லைகள் ஏதும் இல்லாத, எப்ப வேணும்னாலும் எடுக்கக்கூடிய,எப்ப எடுத்தாலும் confirm ஆகிற ரயிலோ-பிரயாணமோ இருக்கா?இருக்கு.எல்லோருக்கும் அந்த வண்டில நிச்சயம் ஒரு இடம் உண்டு.ஆனா எப்ப என்பதில்தான் சுவாரஸ்யமே...சில பேர் தானே விரும்பி அந்த வண்டில ஏறிருவாங்க. சில பேருக்கு போக விருப்பமிருந்தும் காத்திருப்பு பட்டியல்ல தான் இடமிருக்கும்.இன்னும் சில பேரை உறவினர்கள் புடை சூழ வந்து வழியனுப்பி வைப்பாங்க.சில பேர் வண்டி பிளாட்பாரத்தை விட்டு கிளம்பும்போது அவசரமாக வந்து ஏறுவாங்க.நம்ம ஸ்டேசனுக்கும் அந்த வண்டி ஒருநாள் வரத்தான் போகுது.ஏற்கனவே சொன்ன மாதிரி எப்ப என்பதில்தான் சுவாரஸ்யம் - திரில் எல்லாம். அது என்ன வண்டி என்பது உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.
பில் ப்ளேக் - என்ற மனிதன் கிளீவ்லாண்ட் ஊரிலிருந்து மெஷின் என்ற ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கம்பெனியில் அக்கௌன்டன்ட் வேலையில் சேர வரச்சொல்லி அனுப்பப்பட்ட கடிதத்துடன் அங்கு செல்கிறான். போன பிறகுதான் தெரிகிறது அவன் சேர வேண்டிய வேலையில் வேறொருவர் சேர்ந்திருப்பது.இது குறித்து அக்கம்பெனியின் முதலாளியிடம் கேட்கச் சென்று - அவரது கோக்கு மாக்கான நடவடிக்கைகளால் கலவரமடைந்து வெளியே வருகிறான். கையில் வேறு சுத்தமாக காசில்லை. இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்க அவளுடனேயே அன்றிரவை கழிக்கிறான். மறுநாள் காலை அப்பெண்ணின் முன்னால் காதலன் அங்கு வர,அதில் ஏற்படும் தகராறில் அப்பெண்ணும் - காதலனும் இறக்க நேரிடுகிறது.ப்ளேகும் காயமடைகிறான். கொலைப்பழிக்கு அஞ்சி ப்ளேக் காட்டிற்குள் காதலனின் குதிரையில் தப்பிக்கிறான்.ரத்தப் பெருக்கால் நினைவிழக்கிறான். இதற்கிடையே அவனால் சுடப்பட்ட காதலன் - அவன் வேலை தேடி வந்த கம்பெனியின் முதலாளியின் மகன். அவன் தலைக்கு அவர் விலை வைக்கிறார்.இதற்காக பிரத்தியேகமாக மூன்று ஆட்களை - இதுபோன்ற செயல்களில் நிபுணர்களை - நியமிக்கிறார். அதுபோக யார் ப்ளேக்கை உயிருடனோ-பிணமாகவோ கொண்டு வந்தாலும் பரிசு என்று போஸ்டர் கூட ஒட்டுகிறார்.
அடர்ந்த காட்டிற்குள் கண்விழிக்கும் ப்ளேக் தன் முன் ஒரு பழங்குடியின செவ்விந்தியன் நிற்பதையும் அவனே தனக்கு சிகிச்சை அளித்ததையும் உணர்ந்து கொள்கிறான். அந்த செவிந்தியனின் பெயர் - Nobody. அவன் ப்ளேகின் பெயரை கேட்க இவனும் சொல்ல - செவிந்தியன் இவனை William Blake என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞராக கற்பிதம் செய்து கொள்கிறான். தனக்கு William Blakeன் கவிதைகள் என்றால் உயிர் என்றும் தான் அடிமையாய் இருந்த போதும் அதிலிருந்து தப்பி வந்த போதும் அனைத்து பயணத்திலும் அவரின் கவிதைகளே உந்துசக்தியாக இருந்ததாக ப்ளேக்கிடம் கூறுகிறான்.Nobody ப்ளேக்கிடம் உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு உகந்த இடம் இதுவல்ல-உங்களை கடலைத் தாண்டி இருக்கும் அமைதியான ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பது என் பொறுப்பு என்று சூளுரைக்கிறான்.ஏற்கனவே நீங்கள் ஒரு வெள்ளையனை சுட்டிருக்கிறீர்கள்..மேலும் பல வெள்ளையர்களை அழிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது என்று கூறி இருவரும் சேர்ந்து பல சண்டைகளில் ஈடுபட நேர்கிறது. ப்ளேக் Nobodyன் கிராமத்திற்குச் செல்ல நேர்கிறது. அங்கே வெள்ளையர்கள் பழங்குடியினர்களுக்கு எதிராக புரிந்த கொடுமைகளைக் கண்டு திகைப்படைகிறான். இந்நிலையில் அவனை கொல்ல அனுப்பப்பட்ட 3 பேரில் ஒருவன் ப்ளேக்கை தொடர்ந்து அக்கிராமத்திற்கே வந்துவிடுகிறான்.அவனால் ப்ளேக் என்ன ஆனான்-Nobody என்ன ஆனான் இதுவே மீதிக் கதை.
Nobody: Did you kill the white man who killed you?
William Blake: I'm not dead. Am I?
இதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.நீங்கள் பார்த்திங்கன்னா உங்களுக்கே புரியும். சில பேருக்கு வெறும் படமாக தோணலாம். சில பேருக்கு அதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் புரியலாம். எனக்கு முதல்முறையாக பார்க்கும் போது குழப்பமாக இருந்தது. இணையத்தில் மேற்கொண்டு இப்படத்தின் விமர்சனங்களை படித்தே இவ்விஷயங்கள் குறித்து ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.படம் முழுவதும் அத்தனை குறியீடுகள். இசை,ஒளிப்பதிவு முதற்கொண்டு எங்கும் அக்குறியீடுகள் வியாபித்திருக்கிறது. இசை - புகழ் பெற்ற கிடாரிஸ்ட் Neil Young.
படத்தின் டைரக்டர் அமெரிக்காவைச் சேர்ந்த Jim Jarmusch. இவரின் படங்களை Zee Studioவில் ரெண்டு-மூணு வருஷத்திற்கு முன் தொடர்ச்சியாகப் போட்டார்கள். அதில் நான் பார்த்த ரெண்டு படங்கள் - Dead Manனும் Coffee & Cigaretesசும். இதுல Dead Man என்ற தலைப்பே மிகக் கவர(Johnny Deppம் ஒரு காரணம்) அந்த படத்தை தேடிப்பிடித்து மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்.Coffee & Cigaretes கிடைக்கவில்லை. அதுவும் ஒரு அலாதியான கதை: 11 குறுங்கதைகளின் தொகுப்பு.அனைத்து கதைகளையும் இணைக்கும் விஷயம் Coffee மற்றும் Cigaretes. சில கதைகளில் சிகரெட்டின் தீமைகள் குறித்து சிலர் casualலாக உரையாடிக்கொண்டிருப்பார்கள், சில கதைகள் காபி சிகரட் குடித்துக்கொண்டு தங்கள் சொந்த வாழ்கை குறித்து சுவாரசியாமாக சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். ரொம்பவே வித்தியாசமான திரைப்படம். முழுவதும் பார்க்க முடியவில்லை.சிலது மட்டுமே ஞாபகம் இருக்கு.சிலவற்றை விக்கிபீடியா பார்த்து தெரிந்து கொண்டேன்.இந்தப் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.....